கர்நாடக பாஜகவின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவை உடனடியாக நீக்க வேண்டும் என எக்ஸ் தள நிறுவனத்துக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
கர்நாடக பாஜக கடந்த 4-ம் தேதி எக்ஸ் தளப் பக்கத்தில் ஒரு காணொளியைப் பதிவிட்டது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் கர்நாடக முதல்வர் சித்தராமையா ஆகியோர் 17 விநாடிக்கு ஜாக்கிரதை.. ஜாக்கிரதை.. ஜாக்கிரதை.. இடஒதுக்கீடு குறித்து பேசும் வகையில் ஒரு காணொளியைப் பதிவிட்டுள்ளார்கள்.
கர்நாடக பாஜக வன்முறை மற்றும் வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் காணொளியைப் பதிவிட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தல் ஆணையத்திடம் கடந்த 5-ல் புகாரளிக்கப்பட்டது. இந்தப் புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்த கர்நாடக தலைமைத் தேர்தல் அதிகாரி, எக்ஸ் தளப் பக்கத்திலிருந்து அந்தக் காணொளியை நீக்குமாறு கர்நாடக பாஜகவுக்கு உத்தரவிட்டார். தலைமைத் தேர்தல் அதிகாரியின் உத்தரவை மீறியும் கர்நாடக பாஜக இந்தப் பதிவை நீக்கவில்லை.
இதைத் தொடர்ந்து, கர்நாடக பாஜகவின் பதிவை உடனடியாக நீக்குமாறு எக்ஸ் தள நிறுவனத்துக்குத் தேர்தல் ஆணையம் இன்று உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா, பாஜகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு தலைவர் அமித் மால்வியா மற்றும் கர்நாடக பாஜக தலைவர் பிஒய் விஜயேந்திரா ஆகியோர் மீது பெங்களூருவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.