தேர்தல் நேர்மையாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் நடைபெற 6 மாநில உள்துறைச் செயலாளர்களை மாற்ற தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் 19 முதல் 7 கட்டங்களாக நடைபெறும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் 6 மாநில உள்துறைச் செயலாளர்களை மாற்ற தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
குஜராத், உத்தரப் பிரதேசம், பிஹார், ஜார்க்கண்ட், ஹிமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் ஆகிய 6 மாநில உள்துறைச் செயலாளர்களை மாற்ற தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் மேற்கு வங்க மாநில டிஜிபியை மாற்ற வேண்டும் என்றும் கூடுதலாக, மிசோரம் மற்றும் ஹிமாச்சலப் பிரதேசத்தில் பொது நிர்வாகத் துறை செயலாளர்களை மாற்றக்கோரியும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
அதேசமயம் மும்பை மாநகராட்சி ஆணையராக இருக்கும் இக்பால் சஹலையும் இடமாற்றம் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
ஒரே மாவட்டத்தில் 3 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிபவர்கள் அல்லது சொந்த மாவட்டத்தில் பணிபுரிபவர்கள் தேர்தல் தொடர்புடைய பணிகளில் ஈடுபட்டிருந்தால், அவர்களைப் பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என மாநில அரசுகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து இந்த மாற்றத்திற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், மகாராஷ்டிரத்தில் சில நகராட்சி ஆணையாளர்கள், சில கூடுதல் மற்றும் துணை நகராட்சி ஆணையாளர்கள் ஆகியோரை மாற்றும் உத்தரவு ஏற்கப்படவில்லை எனத் தெரிகிறது.