எங்கள் பலத்தைக் குறைத்து மதிப்பிடவேண்டாம்: நவீன் பட்நாயக்

1997-ல் கட்சி தொடங்கப்பட்டதில் இருந்து அதன் தலைவராக நவீன் பட்நாயக் இருந்து வருகிறார்.
எங்கள் பலத்தைக் குறைத்து மதிப்பிடவேண்டாம்: நவீன் பட்நாயக்
1 min read

தொடர்ந்து 9-வது முறையாக பிஜு ஜனதா தளம் கட்சியின் தலைவராகப் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக், எங்கள் கட்சியின் பலத்தைக் குறைத்து மதிப்பிடவேண்டாம் என்று பேசியுள்ளார்.

ஓடிஷா முன்னாள் முதல்வரும், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான நவீன் பட்நாயக், மறைந்த தன் தந்தையின் பெயரில் கடந்த 1997-ல் பிஜு ஜனதா தளம் கட்சியைத் தொடங்கினார். கட்சி தொடங்கப்பட்டதில் இருந்து அதன் தலைவராக நவீன் பட்நாயக் இருந்து வருகிறார். கடைசியாக கடந்த 2020-ல் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்நிலையில், உள்கட்சித் தேர்தலின் ஒரு பகுதியாக கட்சித் தலைவர் பதவிக்கான வேட்புமனுத்தாக்கல் புவனேஸ்வரில் உள்ள கட்சித் தலைமையகமான சங்கா பவனில் கடந்த ஏப்.17 அன்று நடைபெற்றது. தலைவர் பதவிக்கு நவீன் பட்நாயக் மட்டுமே வேட்புமனுவைத் தாக்கல் செய்ததால், அவர் தலைவராக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட அறிவிப்பு இன்று (ஏப்.19) வெளியானது.

இதன்மூலம், தொடர்ந்து 9-வது முறையாக பிஜு ஜனதா தளம் கட்சியின் தலைவராக அவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இதைத் தொடர்ந்து கட்சி நிர்வாகிகளிடையே பேசிய நவீன் பட்நாயக், `பிஜு ஜனதா தளத்தின் பலத்தை யாரும் குறைத்து மதிப்பிடவேண்டாம். கட்சித் தொண்டர்களிடம் உற்சாகம் மிகுதியாக உள்ளது. அவர்கள் நமது உண்மையான சொத்துகள்’ என்றார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலுடன், 147 இடங்களைக் கொண்ட ஒடிஷா சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடைபெற்றது. இதில், 78 இடங்களைப் பாஜக கைப்பற்றி முதல்முறையாக ஒடிஷா மாநிலத்தில் ஆட்சியமைத்தது. இதனால், தொடர்ச்சியாக 24 வருடங்கள் ஒடிஷா முதல்வர் பதவியில் இருந்த நவீன் பட்நாயக்கின் ஆட்சி முடிவுக்கு வந்தது.

மேலும், ஒடிஷாவில் உள்ள 21 மக்களவைத் தொகுதிகளில் 20 தொகுதிகள் பாஜக வசமானது. மக்களவையில் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றாலும், ஓடிஷாவில் வென்ற 20 தொகுதிகள் பாஜகவின் ஒட்டுமொத்த இடங்களின் எண்ணிக்கையை உயர்த்தியது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in