கட்சியின் நிலைப்பாடு அதுவல்ல: காங்கிரஸ் தலைமை விளக்கம்!

கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும்; ஆனால் போர் தேவையில்லை. பாதுகாப்பு அமைப்புக் கடுமையாக்கவேண்டும், நாங்கள் போருக்கு ஆதரவாக இல்லை.
கட்சியின் நிலைப்பாடு அதுவல்ல: காங்கிரஸ் தலைமை விளக்கம்!
ANI
1 min read

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் கடந்த வாரம் 26 பேர் கொல்லப்பட்ட பயங்கரவாத தாக்குதல் குறித்து, கட்சியின் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டிலிருந்து மாறுபடும் கருத்துகள் அனைத்தும் தனிப்பட்டவை என்றும், கட்சியின் நிலைப்பாடு அதுவல்ல என்றும் காங்கிரஸ் கட்சித் தலைமை இன்று (ஏப்.28) அறிவித்துள்ளது.

அக்கட்சியைச் சேர்ந்த முன்னணித் தலைவர்கள் சிலர் பயங்கரவாத தாக்குதல் குறித்து தெரிவித்து வரும் கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்திவரும் நிலையில், காங்கிரஸ் தலைமையின் விளக்கம் வெளியாகியுள்ளது.

பஹல்காம் தாக்குதலுக்கு இரு நாள்கள் கழித்து நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், இந்த விவகாரத்தில் மத்திய அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதாக காங்கிரஸ் தலைமை தெரிவித்தது. இந்நிலையில், பஹல்காம் தாக்குதல் குறித்து கட்சியின் முன்னணித் தலைவர்கள் கூறி வரும் கருத்துகள் காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ராகுல் காந்தியை வருத்தமடைய வைத்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.

`கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும்; ஆனால் போர் தேவையில்லை. பாதுகாப்பு அமைப்புக் கடுமையாக்கவேண்டும், நாங்கள் போருக்கு ஆதரவாக இல்லை’ என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா அண்மையில் கருத்து தெரிவித்திருந்தார்.

மஹாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் விஜய் வடெடிவார், `மக்களிடம் மதத்தைக் கேட்ட பிறகே பயங்கரவாதிகள் கொன்றதாக அரசாங்கம் கூறுகிறது. பயங்கரவாதிகளுக்கு இதற்கெல்லாம் நேரம் இருக்ககுமா?... சிலர் இது நடக்கவில்லை என்று கூறுகிறார்கள். பயங்கரவாதிகளுக்கு சாதியோ, மதமோ கிடையாது. இதற்குப் பொறுப்பானவர்களைக் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்’ என்றார்.

காங்கிரஸ் தலைவர்களின் கருத்துகளுக்கு பாஜக கடும் கண்டனத்தைத் தெரிவித்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் தன் எக்ஸ் கணக்கில்,

`ஊடகங்களிடம் சில காங்கிரஸ் தலைவர்கள் பேசுகிறார்கள். அவர்களுக்காக அவர்கள் பேசுகிறார்கள், அவை காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு அல்ல. காங்கிரஸ் காரிய கமிட்டி தீர்மானம், மல்லிகார்ஜுன் கார்கே, ராகுல் காந்தி மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் தெரிவிக்கும் கருத்துகள் மட்டுமே கட்சியின் நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதாக எடுத்துக் கொள்ளவேண்டும்’ என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in