

நாடாளுமன்ற மாநிலங்களவைத் தேர்தலை முன்னிட்டு திமுக, அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சியினர் வேட்புமனுத் தாக்கல் செய்தனர்.
தமிழ்நாட்டில் திமுக சார்பில் திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், என்.ஆர். இளங்கோ, கனிமொழி சோமு, அதிமுக சார்பில் தம்பிதுரை மற்றும் கடந்த முறை அதிமுக கூட்டணி மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோரின் பதவிக் காலம் வரும் ஏப்ரல் 2 அன்று முடிவடைகிறது. அதைத் தொடர்ந்து இந்த இடங்களுக்கான தேர்தல் நடைபெறவுள்ளது.
மாநிலங்களவைத் தேர்தல் எப்போது?
நாடாளுமன்ற மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த பிப்ரவரி 26 தொடங்கி இன்றுடன் நிறைவடைகிறது. நாளை (மார்ச் 6) வேட்புமனுக்கள் பரிசீலனை நடைபெற்று, மார்ச் 9 அன்று வேட்புமனுக்களை திரும்பப் பெற அவகாசம் வழங்கப்பட்டு, மார்ச் 16 அன்று தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலின் முடிவுகள் அன்றே எண்ணப்பட்டு முடிவுகளும் அறிவிக்கப்படவுள்ளது.
தேமுதிக சார்பில் எல்.கே சுதீஷ் போட்டி
இதில் காலியாக உள்ள 6 இடங்களில் திமுகவுக்கு 4 இடங்களும் அதிமுகவுக்கு 2 இடங்களும் உள்ளன. இதில் திமுக சார்பில் 2 இடங்களில் போட்டியிட திருச்சி சிவா மற்றும் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் ஆகியோர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டனர். இதையடுத்து தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் இருவரும் தங்கள் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர். அதேபோல் சட்டமன்ற தேர்தலுக்காக திமுக கூட்டணியில் இணைந்துள்ள தேமுதிகவுக்கும் காங்கிரஸுக்கும் தலா ஒரு மாநிலங்களவை இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதில், தேமுதிக சார்பில் அக்கட்சியின் பொருளாளர் எல்.கே. சுதீஷ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, அவர் இன்று மனுத்தாக்கல் செய்தார்.
காங்கிரஸ் வேட்பாளர் மனுத்தாக்கல்
காங்கிரஸைப் பொறுத்தவரை சட்டமன்ற தேர்தல் தொகுதிப் பங்கீடு, மிகுந்த இழுபறிக்குப் பிறகு 28 தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களை உறுப்பினர் இடம் என்று முடிவாகியிருக்கிறது. அதன்படி காங்கிரஸ் சார்பில் கிறிஸ்டோபர் திலக் அறிவிக்கப்பட்டு, வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் கிறிஸ்டோபர் திலக் வேட்புமனு தாக்கல் செய்தபோது காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோர் உடனிருந்தனர்.
அன்புமணி ராமதாஸ் மனுத்தாக்கல்
அதிமுக தரப்பில் ஏற்கெனவே மாநிலங்களவை உறுப்பினராக உள்ள தம்பிதுரை மீண்டும் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். அதேபோல் அதிமுகவுடன் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்துள்ள அன்புமணி தலைமையிலான பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் இடம் வழங்கப்படுவதாக ஏற்கெனவே அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். அதன்படி, பாமக சார்பில் அன்புமணி ராமதாஸ் மாநிலங்களவை உறுப்பினராகப் போட்டியிட வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் இருவரும் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர்.
DMK, AIADMK and allied parties filed nominations for the biennial Rajya Sabha Polls