ஒப்புதல் பெற்றே பாகிஸ்தான் பெண்ணை மணந்தேன்: பணிநீக்கம் செய்யப்பட்ட சிஆர்பிஎஃப் வீரர்

காணொளி வழியாக கடந்த 24 மே 2024 அன்று இருவரும் இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்துகொண்டனர்.
ஒப்புதல் பெற்றே பாகிஸ்தான் பெண்ணை மணந்தேன்: பணிநீக்கம் செய்யப்பட்ட சிஆர்பிஎஃப் வீரர்
1 min read

பாகிஸ்தானைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்ததை மறைத்த குற்றச்சாட்டில் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள சிஆர்பிஎஃப் வீரர் முனீர் அகமது, தலைமையகத்தில் முறையான ஒப்புதல் பெற்றே திருமணம் செய்ததாக தகவல் தெரிவித்துள்ளார்.

ஜம்முவில் உள்ள கரோட்டா என்ற பகுதியைச் சேர்ந்த முனீர் அகமது கடந்த ஏப்ரல் 2017-ல் சிஆர்பிஎஃப் பணியில் இணைந்தார். அதன் பிறகு, பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தைச் சேர்ந்த மினல் கான் என்பவருடன் இணையதளத்தில் அவருக்குப் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இருவரும் காதலிக்கத் தொடங்கியுள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக காணொளி வழியாக கடந்த 24 மே 2024 அன்று இருவரும் இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்துகொண்டனர். குறுகிய கால விசா பெற்று வாகா-அட்டாரி எல்லைப் பகுதி வழியாக கடந்த பிப். 28 அன்று இந்தியாவுக்குள் மினல் கான் நுழைந்தார்.

மார்ச் 22 அன்று அவரது விசா முடிவுக்கு வந்த நிலையில், நீண்ட கால விசா பெறுவதற்கான நடைமுறைகளை நிறைவுசெய்திருந்ததால் அவரை திருப்பி அனுப்புவதற்கான நடவடிக்கைகளுக்கு ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் உயர் நீதிமன்றம் தடை விதித்தது.

இந்நிலையில், பாகிஸ்தானிய பெண்ணைத் திருமணம் செய்ததை மறைத்துவிட்டதாகவும், தேசப்பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலும் பணி விதிகளை மீறும் வகையிலும் விசா காலாவதியான பிறகும் அவரை இந்தியாவில் தங்க அனுமதித்த குற்றத்திற்காகவும், முனீர் அகமதை சிஆர்பிஎஃப் பணி நீக்கம் செய்தது.

ஆனால், மினல் கானை திருமணம் செய்வது குறித்து கடந்த 31 டிசம்பர் 2022 அன்று தகவல் அளித்ததாகவும், அதற்கான அனுமதி தலைமையகத்தில் இருந்து கடந்த 30 ஏப்ரல் 2024 அன்று கிடைக்கப்பெற்றதாகவும் முனீர் அகமது தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக பிடிஐ ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் முனீர் அகமது கூறியதாவது,

`என்னைப் பணிநீக்கம் செய்துள்ளதை ஊடகங்களில் வெளியான செய்திகள் மூலமாகவே முதலில் அறிந்துகொண்டேன். சிறிது நேரத்திற்குள்ளாகவே, பணிநீக்கம் செய்யப்பட்டதை தெரிவிக்கும் சிஆர்பிஎஃப் கடிதம் எனக்குக் கிடைத்தது. எனக்கும், என் குடும்பத்துக்கும் அது அதிர்ச்சி அளித்தது. ஏனென்றால் பாகிஸ்தான் பெண்ணைத் திருமணம் செய்வதற்காக சிஆர்பிஎஃப் தலைமையகத்திடம் அனுமதி கேட்டேன். அவர்களும் வழங்கினார்கள்’ என்றார்.

மேலும், அப்போது தன்னிடம் இதற்கு எந்தவிதமான தடையில்லா சான்றிதழும் தேவையில்லை என்று உயரதிகாரிகள் கூறியதாகவும், இதற்காக தனது தரப்பில் இருந்து அனைத்து விதமான ஆவணங்களையும் சமர்ப்பித்தாகவும், அனைத்தும் முறைப்படி இருப்பதாகக் கருதியதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன், இந்த விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கையாக நீதிமன்றத்தின் உதவியை நாட முடிவுசெய்துள்ளதாகவும் முனீர் அகமது தகவலளித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in