பிஆர்எஸ் தலைவர் கவிதாவுக்கு ஏப்ரல் 23 வரை நீதிமன்றக் காவல்

கவிதாவைக் காவலில் எடுக்க அவசியம் இல்லை - சிபிஐ
பிஆர்எஸ் தலைவர் கவிதாவுக்கு ஏப்ரல் 23 வரை நீதிமன்றக் காவல்

பிஆர்எஸ் தலைவரும், தெலங்கானா சட்டமேலவை உறுப்பினருமான கவிதாவை ஏப்ரல் 23 வரை நீதிமன்றக் காவலில் வைக்க தில்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தில்லி மதுபானக் கொள்கை பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையால் கடந்த மார்ச் 15-ல் கைது செய்யப்பட்டுள்ள பிஆர்எஸ் தலைவர் கவிதா, தற்போது நீதிமன்றக் காவலில் உள்ளார். இதனிடையே, கவிதாவிடம் விசாரணை நடத்த சிபிஐ தரப்பில் அனுமதி கோரப்பட்டது. இதற்கு தில்லி சிறப்பு நீதிமன்றம் கடந்த ஏப்ரல் 5-ல் அனுமதி வழங்கியது.

இதைத் தொடர்ந்து, கவிதாவிடம் விசாரணை நடத்திய சிபிஐ அவரைக் கைது செய்து தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது. இவரை 5 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ அனுமதி கோரியது. ஆனால், தில்லி சிறப்பு நீதிமன்றம் மூன்று நாள்கள் மட்டுமே அனுமதி வழங்கியது.

சிபிஐ காவல் இன்றுடன் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, கவிதா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இவரைக் காவலில் எடுக்க அவசியம் இல்லை என சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இவரை ஏப்ரல் 23 வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in