பிஆர்எஸ் எம்எல்சி கவிதாவுக்கு 7 நாள்கள் அமலாக்கத் துறை காவல்

இந்த வழக்கு தொடர்பாக கவிதாவிடம் கடந்தாண்டு மூன்று முறை விசாரணை நடைபெற்றுள்ளது.
பிஆர்எஸ் எம்எல்சி கவிதாவுக்கு 7 நாள்கள் அமலாக்கத் துறை காவல்

பாரத ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) கட்சியின் சட்டமேலவை உறுப்பினரும், முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகளுமான கே. கவிதாவை 7 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு தில்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

தில்லி மதுபானக் கொள்கை தொடர்புடைய பணமோசடி வழக்கில் கே. கவிதாவுக்குத் தொடர்பு இருப்பதாக ஹைதராபாதில் உள்ள அவரது இல்லத்தில் அமலாக்கத் துறையினர் வெள்ளிக்கிழமை சோதனை நடத்தினார்கள். சோதனையின் முடிவில் கைது செய்யப்பட்ட கவிதா, நேற்றிரவு தில்லி அழைத்து வரப்பட்டார்.

இதைத் தொடர்ந்து, தில்லியிலுள்ள சிறப்பு நீதிமன்றத்தில் கவிதா இன்று ஆஜர்படுத்தப்பட்டார். மூத்த வழக்கறிஞர் விக்ரம் சௌதரி, வழக்கறிஞர் நிதேஷ் ராணா ஆகியோர் கவிதா சார்பாக ஆஜரானார்கள். வழக்கறிஞர்கள் வஜீ ஷபிஃப்க், அனுஜ் திவாரி மற்றும் தீபக் நாகர் ஆகியோர் இந்த வழக்கு தொடர்பாக கவிதா சார்பில் ஆஜரானார்கள். அமலாக்கத் துறை சார்பில் சிறப்பு வழக்கறிஞர் ஸோகெப் ஹோசைன் மற்றும் அரசுத் தரப்பு சிறப்பு வழக்கறிஞர் நவீன் குமார் மட்டா ஆகியோர் ஆஜரானார்கள்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட தில்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி எம்கே நாக்பால், கவிதாவை மார்ச் 23 வரை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.

இந்த வழக்கு தொடர்பாக கவிதாவிடம் கடந்தாண்டு மூன்று முறை விசாரணை நடைபெற்றுள்ளது. பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் இவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்கு தொடர்பாக சிபிஐயும் கவிதாவிடம் விசாரணை நடத்தியது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in