நேஷனல் ஹெரால்டு வழக்கு: சோனியா, ராகுலுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்!

இந்த கட்டத்தில் குற்றம்சாட்டப்பட்டவர்களிடம் கருத்து கேட்பதால், அமலாக்கத்துறைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.
நேஷனல் ஹெரால்டு வழக்கு: சோனியா, ராகுலுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்!
ANI
1 min read

நேஷனல் ஹெரால்டு பணமோசடி வழக்கில், காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகை குறித்து அவர்களிடம் கருத்து கேட்கும் வகையில் தில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.

நேஷனல் ஹெரால்டு பத்திரிகை வெளியீட்டாளரான அசோசியேட்டட் ஐர்னல்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான ரூ. 2,000 கோடி மதிப்பிலான சொத்துகளை அபகரிக்கும் வகையில், அந்நிறுவனத்தின் 99% பங்குகளை வெறும் ரூ. 50 லட்சத்திற்கு வாங்கப்பட்டதாக அமலாக்கத்துறையால் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோருக்கு எதிராக குற்றம்சாட்டப்பட்டது.

அசோசியேட்டட் ஐர்னல்ஸ் நிறுவனத்தின் பங்குகளை ரூ. 50 லட்சத்திற்கு வாங்கிய யங் இந்தியன் நிறுவனத்தின் முக்கியப் பங்குதாரர்களாக சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் உள்ளனர். இந்த விவகாரத்தில் தில்லி பட்டியாலா ஹவுஸ் நீதிமன்றம் வழங்கிய உத்தரவின் அடிப்படையில், இது தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை 2021-ல் தொடங்கப்பட்டது.

இந்த வழக்கின் குற்றப்பத்திரிகை கடந்த ஏப்.15-ல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக ஏப்.25-ல் வழக்கு விசாரணை தொடங்கியது.

அப்போது இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சோனியா, ராகுல், சாம் பிட்ரோடா, சுமன் துபே உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்த நோட்டீஸ் அளிக்கவேண்டும் என்று அமலாக்கத்துறை சார்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. ஆனால் முழுமையான திருப்தி இல்லாத்தால் நோட்டீஸ் பிறப்பிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.

இந்நிலையில், பாரதிய நியாய சன்ஹிதாவின் 223-வது பிரிவின் அடிப்படையில், குற்றம்சாட்டப்பட்டவர்களிடம் குற்றச்சாட்டுகள் குறித்து கருத்துகேட்க ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தால் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டத்தில் குற்றம்சாட்டப்பட்டவர்களிடம் கருத்து கேட்பதால், அமலாக்கத்துறைக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in