தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் அமலாக்கத் துறை காவல் நீட்டிப்பு

"இதுவொரு அரசியல் சதி. இதற்கு மக்கள் தக்க பதிலைக் கொடுப்பார்கள்"
தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் அமலாக்கத் துறை காவல் நீட்டிப்பு
ANI

தில்லி மதுபானக் கொள்கை பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் அமலாக்கத் துறை காவல் ஏப்ரல் 1 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தில்லி மதுபானக் கொள்கை பணமோசடி வழக்கில் தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மார்ச் 21-ல் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். மார்ச் 22-ல் தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவாலை மார்ச் 28 வரை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு அனுமதி வழங்கியது.

அமலாக்கத் துறை காவலிலிருந்தபடியே கெஜ்ரிவால் இரு உத்தரவுகளைப் பிறப்பித்து, முதல்வராகத் தொடர்கிறார். இவருடைய அமலாக்கத் துறை காவல் இன்றுடன் நிறைவடைந்த நிலையில், தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் அவர் இன்று ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது, கெஜ்ரிவாலைக் காவலில் எடுத்து விசாரிக்க கூடுதல் அவகாசம் கோரி அமலாக்கத் துறை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அமலாக்கத் துறை சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்வி ராஜூ, அமலாக்கத் துறை விசாரணைக்கு கெஜ்ரிவால் வேண்டுமென்றே ஒத்துழைக்க மறுப்பதாக வாதிட்டார். மேலும், எந்தவொரு கடவுச் சொற்களையும் அவர் பகிர்ந்துகொள்ளாததால், டிஜிட்டல் தரவுகள் எதையும் எங்களால் அணுக முடியவில்லை என்றும் அவர் கூறினார்.

"நான் கைது செய்யப்பட்டுள்ளபோதிலும், எந்த நீதிமன்றத்திலும் நான் குற்றவாளி என்பது நிரூபணம் ஆகவில்லை. கைது நடவடிக்கைக்குப் பின் அரசியல் காரணம் உள்ளது. என்னை எத்தனை நாள்கள் வேண்டுமானாலும் காவலில் வைக்கலாம். விசாரணைக்கு நான் தயார்" என்று கெஜ்ரிவால் தரப்பில் வாதிடப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்டு தீர்ப்பை ஒத்திவைத்த தில்லி சிறப்பு நீதிமன்றம், அவரை ஏப்ரல் 1 வரை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.

தீர்ப்புக்குப் பிறகு நீதிமன்றத்திலிருந்து அழைத்து வரப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவால், "இதுவொரு அரசியல் சதி. இதற்கு மக்கள் தக்க பதிலைக் கொடுப்பார்கள்" என்று கூறினார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in