சோனியா காந்தி மீது அவதூறு: அமித்ஷாவுக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ்!

அரசாங்க நிதி அமைப்பின் ஓர் அங்கமாக காங்கிரஸ் தேசியத் தலைவர் இருந்துள்ளார். இதற்காக இந்நாட்டு மக்களிடம் தெரிவிக்க அவர்களிடம் என்ன பதில் உள்ளது?
சோனியா காந்தி மீது அவதூறு: அமித்ஷாவுக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ்!
ANI
1 min read

சோனியா காந்தியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசியதாகக் கூறி, அவர் மீது உரிமை மீறல் தீர்மானம் கொண்டுவர நோட்டீஸ் அளித்துள்ளார் காங்கிரஸ் எம்.பி. ஜெய்ராம் ரமேஷ்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேற்று (மார்ச் 25) பேரிடர் மேலாண்மை சட்டமுன்வடிவு மசோதா தொடர்பாக நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதாவது,

`காங்கிரஸ் ஆட்சியின்போது பிரதமர் நிவாரண நிதி உருவாக்கப்பட்டது. இந்த ஆட்சியால் பி.எம். கேர்ஸ் நிதி தொடங்கப்பட்டது. காங்கிரஸ் ஆட்சியின்போது, ஒரே ஒரு குடும்பத்தால் மட்டுமே அது கட்டுப்படுத்தப்பட்டது, மேலும் அதன் உறுப்பினராக காங்கிரஸ் தேசியத் தலைவர் இருந்தார்.

அரசாங்க நிதி அமைப்பின் ஓர் அங்கமாக காங்கிரஸ் தேசியத் தலைவர் இருந்துள்ளார். இதற்காக இந்நாட்டு மக்களிடம் தெரிவிக்க அவர்களிடம் என்ன பதில் உள்ளது? இதை யாராவது கவனித்தார்களா?’ என்றார்.

அமித்ஷா இவ்வாறு தெரிவித்த கருத்துகளை முன்வைத்து அவருக்கு எதிர்த்து, மாநிலங்களவை நடத்தை விதி எண் 188-ன் கீழ் உரிமை மீறல் தீர்மானம் கொண்டுவர மாநிலங்களவைத் தலைவரிடம் நோட்டீஸ் வழங்கியுள்ளார் காங்கிரஸ் பொதுச்செயலாளரும், மாநிலங்களவை எம்.பி.யுமான ஜெய்ராம் ரமேஷ்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ஜெய்ராம் ரமேஷ், `உள்துறை அமைச்சர் கூறியவை முற்றிலும் தவறானதாகும். இது சோனியா காந்திக்கான உரிமையை மீறும் செயலாகும். பெயரை உள்துறை அமைச்சர் கூறவில்லை என்றாலும், சோனியா காந்தியைத்தான் அவர் குறிப்பிட்டார்’ என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in