
காங்கிரஸ் கட்டுப்பாட்டில் உள்ள ஏஜேஎல் தொடர்புடைய வழக்கில் ரூ. 661 கோடி மதிப்புடைய அசையா சொத்துகளை இணைக்க முடிவு செய்து அமலாக்கத் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
நேஷனல் ஹெரால்டு வழக்கு என்று பிரபலமாக அறியப்படும் வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கைத் தொடர்ந்தது சுப்ரமணியம் சுவாமி. அசோசியேடட் ஜெர்னல்ஸ் லிமிடெட் தொடர்புடைய ரூ. 5 ஆயிரம் கோடிக்கும் மேற்பட்ட சொத்துகளை யங் இந்தியன் பிரைவேட் லிமிடெட் 2010-ல் வாங்கியது. யங் இந்தியன் பிரைவெட் லிமிடெட்டில் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு தலா 38% பங்கு இருக்கிறது.
இதில் முறைகேடு நடந்திருப்பதாக சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி மீது குற்றம்சாட்டப்பட்டது. தில்லி நீதிமன்றத்தில் சுப்ரமணியம் சுவாமி 2014-ல் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அமலாக்கத் துறை 2021-ல் ஏஜேஎல் லிமிடெட் பணமோசடி வழக்கு விசாரணையைத் தொடர்ந்தது. விசாரணையைத் தொடர தில்லி உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கின. வழக்கு விசாரணையின்போது பல்வேறு இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தி பல்வேறு ஆவணங்களைக் கைப்பற்றியது.
போலி நிதியாக ரூ. 18 கோடி விளம்பரங்கள் மூலம் ரூ. 29 கோடி உள்ளிட்டவற்றை சட்டவிரோதமாகத் திரட்டுவதற்காக ஏஜேஎல் - யங் இந்தியன் நெட்வொர்க் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது அமலாக்கத் துறையின் குற்றச்சாட்டாக உள்ளது.
பணமோசடி வழக்கு விசாரணையின் பகுதியாக நவம்பர் 2023-ல் அசோசியேடட் ஜர்னல்ஸ் லிமிடெட் தொடர்புடைய ரூ. 661 கோடி மதிப்புடைய சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியது.
இதன் தொடர்ச்சியாக இந்த சொத்துகள் அனைத்தையும் இணைக்க அமலாக்கத் துறை முடிவு செய்துள்ளது. இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள அமலாக்கத் துறை தொடங்கியுள்ளது. தில்லியில் உள்ள ஹெரால்டு ஹவுஸ் உள்பட தில்லி, மும்பை மற்றும் லக்னௌ என பல்வேறு இடங்களில் உள்ள அசையா சொத்துகளை இணைக்க அமலாக்கத் துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பி ஒட்டப்பட்டுள்ளன.