
நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவுக்கு சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை வழங்கப்படுவதாக செய்தி வெளியாகியுள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், சுதந்திரப் போராட்ட வீரருமான இரா. நல்லகண்ணு (100) கடந்த 22 ஆகஸ்ட் அன்று, அவரது இல்லத்தில் எதிர்பாராவிதமாக கீழே விழுந்தார். இதனால் தலையில் ஏற்பட்ட காயம் காரணமாக சென்னை நந்தனத்தில் உள்ள வெங்கடேஸ்வரா மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.
இதைத் தொடர்ந்து அவரது தலையில் தையல் போடப்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் சிறப்பு சிகிச்சைகள் வழங்கப்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டது.
மேலும், நூறு வயது தாண்டிய நிலையில் வயது மூப்பு காரணமாக அவரது உடம்பில் ஏற்பட்டுள்ள மற்ற சில பிரச்னைகளுக்கும் சிகிச்சைகள் அளிக்க நரம்பியல் நிபுணர், நுரையீரல் நிபுணர், இருதய நிபுணர், தீவிர சிகிச்சைப் பிரிவு நிபுணர் ஆகியோர் அடங்கிய சிறப்பு மருத்துவர் குழு அமைக்கப்பட்டதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்தது.
மேலும், அவரது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால் ஓரிரு நாளில் பூரண நலம் பெற்று வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் மருத்துவ நிர்வாகம் கூறியது.
இந்நிலையில், நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நல்லகண்ணு நேற்றிரவு (ஆக. 24) ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மூத்த மருத்துவர்கள் அடங்கிய முழு தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.