
ரூ. 7,640 கோடி வரி செலுத்தத் தயாராக இருப்பதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு திஹார் சிறைக் கைதி சுகேஷ் சந்திரசேகர் கடிதம் அனுப்பியுள்ளார்.
சுகேஷ் சந்திரசேகர் பலகோடி ரூபாய் முறைகேடு வழக்கில் தில்லி திஹார் சிறையில் உள்ளார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு எழுதியுள்ள கடிதத்தில், 2024-25 நிதியாண்டில் தனது வருமானம் ரூ. 22,410 கோடி எனக் கணக்குக் காட்டியுள்ளார். தனது வழக்கறிஞர் மூலம் இந்தக் கடிதத்தை அவர் அனுப்பியுள்ளார்.
அமெரிக்கா மற்றும் பிரிட்டிஷ் வெர்ஜின் தீவுகள் உள்ளிட்ட வெளிநாடுகளில் நடத்தி வரும் சர்வதேச தொழில் நிறுவனங்கள் மூலம், இந்த வருவாயை ஈட்டியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 2016 முதல் செயல்பாட்டில் உள்ள இந்த நிறுவனங்கள் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் கேமிங் மற்றும் பெட்டிங் சார்ந்த நிறுவனங்கள் என்று அவருடையக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பெருமைக்குரிய இந்தியராக, பிரதமர் நரேந்திர மோடியின் சிறப்பான தலைமைப் பண்பின் கீழ் உலகத் தரம் மிக்க வளர்ச்சியை நோக்கி நாடு முன்னேறி வருவதற்கு என்னுடையப் பங்களிப்பை ஆற்ற விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சொத்து விவரங்கள் பற்றிய உண்மைத் தன்மை இன்னும் உறுதி செய்யப்படவில்லை.