இதர பிற்படுத்தப்பட்டவர்களின் உரிமைகளை காங்கிரஸ் பறிப்பதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:
"கர்நாடகத்தில் உள்ள காங்கிரஸ் அரசு ஒரே இரவில் அனைத்து முஸ்லிம் வகுப்பினரையும் ஓபிசியாக மாற்றி, 27% இடஒதுக்கீட்டைப் பறித்துள்ளார்கள். ஓபிசியினரின் உரிமைகளை காங்கிரஸ் பறித்துள்ளது. இதே ஆட்டத்தை உத்தரப் பிரதேசத்திலும் விளையாட காங்கிரஸ் முனைகிறது.
வாய்ப்புகள் கிடைக்கும் இடங்களிலெல்லாம் ஓபிசி, எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினருக்கான உரிமைகளைப் பின்வாசல் வழியாக ரகிசயமாகப் பறிக்க காங்கிரஸ் நினைக்கிறது. சமாஜவாதியும் இதற்கு முழு ஆதரவைத் தருகிறது.
சுதந்திரம் அடைந்தது முதல் மதத்தின் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கப்படாது என்பதில் நாடு உறுதியாக உள்ளது. அம்பேத்கர் தலைமையிலான குழுவிலேயே இது முடிவு செய்யப்பட்டது" என்றார் பிரதமர் மோடி.
உத்தரப் பிரதேசத்தில் முதற்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 19-ல் நடைபெற்றது. ஏப்ரல் 26-ல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மே 7-ல் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவும், மே 13-ல் நான்காம் கட்ட வாக்குப்பதிவும், மே 20-ல் ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவும், மே 25-ல் ஆறாம் கட்ட வாக்குப்பதிவும், ஜூன் 1-ல் ஏழாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
ஜூன் 4-ல் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.