
2010 தில்லி காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி தொடர்பான பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறை வழங்கிய அறிக்கையை ஏற்றுக்கொண்டு, தில்லி நீதிமன்றம் வழக்கை முடித்துவைத்துள்ளது.
இதையடுத்து, இந்த விவகாரத்தில் நாட்டையும் பொதுமக்களையும் தவறாக வழிநடத்திய பிரதமர் நரேந்திர மோடியும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலும் மன்னிப்புக் கேட்கவேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
2010 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் ஏற்பாட்டுக் குழுத் தலைவராக இருந்த சுரேஷ் கல்மாடி, பொதுச் செயலாளர் லலித் பனோட் மற்றும் பலர் மீதான பணமோசடி வழக்கில், அமலாக்கத்துறை அளித்த இறுதி முடித்துவைப்பு அறிக்கையை தில்லி நீதிமன்றம் நேற்று (ஏப்.28) ஏற்றுக்கொண்டது.
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஊழல் வழக்கை சிபிஐ ஏற்கனவே முடித்து வைத்துவிட்டதாகவும், அதன் அடிப்படையில்தான் அமலாக்கத்துறை பணமோசடி விசாரணையைத் தொடங்கியதாகவும் விசாரணையின்போது சிறப்பு நீதிபதி சஞ்சீவ் அகர்வால் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விவகாரத்தில் பணமோசடி குற்றத்தை நிரூபிக்க முடியவில்லை என்ற அமலாக்கத்துறையின் வாதத்தை நீதிபதி ஏற்றுக்கொண்டார். அமலாக்கத்துறை அறிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டதன் மூலம், 15 ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததாகக் கூறப்பட்ட காமன்வெல்த் ஊழலின் பணமோசடிக் கோணம் முடிவுக்கு வந்தது.
2014-க்கு முன்பு ஆம் ஆத்மியும், பாஜகவும் ஒன்றிணைந்து 2ஜி மற்றும் காமன்வெல்த் போட்டிகளில் ஊழல் என்று திரித்துக்கூறி காங்கிரஸ் கட்சி மீது அவதூறு பரப்பியதாகவும், நேர்மையான மற்றும் அர்ப்பணிப்புமிக்க இரு தலைவர்களான மன்மோகன் சிங், ஷீலா தீட்சித் மீது பொய்யான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டதாகவும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தன் எக்ஸ் கணக்கில் வெளியிட்ட பதிவில் குற்றம்சாட்டியுள்ளார்.