
ஆதார் தகவல்களை இலவசமாக புதுப்பிக்கப்பதற்கான காலக்கெடுவை நிபந்தனையுடன் அடுத்த 6 மாதங்களுக்கு நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளது இந்திய தனித்துவ அடையாள அமைப்பு.
10 வருடங்கள் மற்றும் அதற்கு மேலான காலத்திற்கு முன்பு ஆதாரைப் பெற்ற சுமார் 40 கோடி இந்தியர்கள் தங்களது ஆதார் விவரங்களைப் புதுப்பிக்கவில்லை என்பதால் செப்.14-க்குள் அந்த விவரங்களை இலவசமாக புதுப்பித்துக்கொள்ளலாம் என முன்பு அறிவித்தது இந்திய தனித்துவ அடையாள அமைப்பு. இதனைத் தொடர்ந்து இந்த காலக்கெடு டிச.14 வரை நீட்டிக்கப்பட்டது.
நாளை (டிச.15) முதல், ஆதார் விவரங்களைப் புதுப்பிக்க ரூ. 50 கட்டணம் வசூலிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், ஆதார் விவரங்களை ஆதார் இணையத்தளத்தில் மட்டும் இலவசமாக புதுப்பிப்பதற்கான காலக்கெடுவை 6 மாதங்களுக்கு நீட்டித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது இந்திய தனித்துவ அடையாள அமைப்பு.
இது தொடர்பாக இந்திய தனித்துவ அடையாள அமைப்பு வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக வலைதளப் பதிவு பின்வருமாறு, `லட்சக்கணக்கான ஆதார் பயனாளர்களுக்குப் பயனளிக்கும் வகையில், இலவசமாக இணைய வழியாக ஆவணங்களைப் பதிவேற்றுவதற்கான காலக்கெடு வரும் 14 ஜூன் 2025 வரை நீட்டிக்கப்படுகிறது. இந்த இலவச சேவையை ஆதார் (myaadhaar) இணையதளத்தில் மட்டுமே பெற முடியும்’.
இந்த அறிவிப்பின் அடிப்படையில், அடுத்த 6 மாத காலத்திற்கு ஆதார் இணையத்தளத்தில் மட்டுமே ஆதார் தகவல்களை இலவசமாக புதுப்பிக்க முடியும், ஆதார் சேவை மையங்களில் ஆதார் தகவல்களை புதுப்பிக்க ரூ. 50 கட்டணமாக வசூலிக்கப்படும்.