

விமானங்களில் குறைந்தபட்சம் 60% இருக்கைகளைக் கட்டணமின்றி ஒதுக்க வேண்டும் என விமான நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
விமானங்களில் பயணச் சீட்டு முன்பதிவு செய்யும் பயணிகள், தங்களுக்கு விருப்பமான இருக்கைகளைத் தேர்வு செய்து கொள்ளும் வசதி உண்டு. ஆனால், சில விமான நிறுவனங்கள் அத்தகைய விருப்பமான இருக்கைத் தேர்வுக்குக் கட்டணம் வசூலிக்கின்றன.
பயணிகள் தொடர் புகார்
செல்லும் ஊர்களுக்குத் தகுந்தபடி அந்த இருக்கைக் கட்டணங்கள் நிர்ணயிக்கப்படுகின்றன. குறிப்பாக ஜன்னலோர் இருக்கைகள், இடைவெளியோர இருக்கைகள், கால் வைக்கும் வசதி கொண்ட இருக்கைகளுக்கு அதிக கட்டணம் வைக்கப்படுகிறது. இடைஞ்சல் மிகுந்த நடு இருக்கைகள் மட்டுமே கட்டணமின்றி தேர்வு செய்யும் வகையில் உள்ளன. அதேபோல் ஒரே பி.என்.ஆர். எண்ணில் குடும்பமாக முன்பதிவு செய்யும் பயணிகளுக்கும் வெவ்வேறு இருக்கைகள் ஒதுக்கப்படுகின்றன. இவை குறித்து பயணிகள் தொடர்ச்சியாக சமூக ஊடகங்களில் புகார் எழுப்பி வந்தனர்.
விமான நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல்
இதையடுத்து விமான நிறுவனங்களுக்குப் பொது விமானப் போக்குவரத்து அமைச்சகம் புதிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அதன்படி, குறைந்தபட்சம் 60% இருக்கைகள் பயணிகள் தேர்வுக்குக் கட்டணமின்றி ஒதுக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட முக்கிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக விமான போக்குவரத்து அமைச்சகத்தின் எக்ஸ் பக்கத்தில் வெளியாகியுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
நியாயமான அணுகுமுறையை உறுதி செய்யும் வகையில், எந்த விமானத்திலும் குறைந்தபட்சம் 60% இருக்கைகள் கட்டணமின்றி ஒதுக்கப்பட வேண்டும்.
ஒரே பி.என்.ஆர். எண்ணில் பயணிக்கும் பயணிகள் அனைவருக்கும் அடுத்தடுத்த இருக்கைகள் முன்னுரிமை அளிக்கப்பட்டு, ஒன்றாக அமர வைக்கப்பட வேண்டும்.
விளையாட்டு உபகரணங்கள் மற்றும் இசைக்கருவிகளை எடுத்துச் செல்வது பாதுகாப்பு மற்றும் இயக்க விதிமுறைகளுக்கு உட்பட்டு வெளிப்படையாகவும் பயணிகளுக்கு உகந்த வகையிலும் எளிதாக்கப்பட வேண்டும்.
செல்லப் பிராணிகளைக் கூட்டிச் செல்வதற்கான தெளிவான, வெளிப்படையான கொள்கைகளையும் விமான நிறுவனங்கள் வெளியிட வேண்டும்.
தாமதம், ரத்து மற்றும் பயணம் மறுக்கப்படும் சூழல்களில் பயணிகள் உரிமைகள் கட்டமைப்பைக் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.
விமான நிறுவனங்களின் இணையதளங்கள், செயலிகள், பதிவு தளங்கள் மற்றும் விமான நிலைய கவுன்டர்களில் பயணிகள் உரிமைகள் பகிரங்கமாக காட்சிப்படுத்தப்பட வேண்டும்.
மக்களுக்கு விழிப்புணர்வை உறுதி செய்ய, பயணிகளின் உரிமைகள் மற்றும் பெறத்தக்க சலுகைகள் பிராந்திய மொழிகளில் தெளிவாக தெரிவிக்கப்பட வேண்டும்.
பொது விமானப் போக்குவரத்து அமைச்சகம், பயணிகளின் அனுபவத்தை மேம்படுத்துவது, வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வது, புகார்களை குறைப்பது மற்றும் விமானப் போக்குவரத்து துறையில் மிக உயர்ந்த பாதுகாப்பு தரங்களை பாதுகாப்பது ஆகியவற்றில் உறுதியாக உள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Ministry of Civil Aviation has asked airline operators to ensure that at least 60 per cent of seats on any flight are free. This comes after many passengers flagged hidden costs such as seat selection charges and accused airline operators of exploiting customers.