
சத்தீஸ்கர் மாநிலம் பிஜாப்பூர் மாவட்டத்தில், நக்சல் அமைப்புகளுக்கு எதிராக எடுக்கப்பட்டுவரும் மிகப்பெரிய அளவிலான பாதுகாப்புப் படை நடவடிக்கையின் ஒரு பகுதியாக, இன்று (மே 7) 15-க்கும் மேற்பட்ட நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டதாக சத்தீஸ்கர் காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
நக்சல் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சத்தீஸ்கர் மாநிலத்தின் பாஸ்தர் பகுதியில் பாதுகாப்புப் படையினர் தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நடவடிக்கையில் மாவட்ட ரிசர்வ் காவல்படை, சிஆர்பிஎஃப், சிறப்பு அதிரடிப்படை ஆகியவற்றைச் சேர்ந்த சுமார் 24,000 வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், பிஜாப்பூர் மாவட்டத்தில் இன்று (மே 7) 15-க்கும் மேற்பட்ட நக்சல்கள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இது தொடர்பாக, நக்சல்களுக்கு எதிரான நடவடிக்கையை மேற்பார்வையிடும் மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது,
`இந்த மோதல் புதன்கிழமை (மே 7) அதிகாலையில் நடந்தது. முதற்கட்ட தகவல்களின்படி, சத்தீஸ்கர்-தெலுங்கானா மாநிலங்களின் எல்லையில் அமைந்துள்ள கரேகுட்டா மலைகளைச் சுற்றியுள்ள அடர்ந்த காடுகளில் 15 முதல் 18 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். தேடுதல் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது’ என்றார்.
இந்த நடவடிக்கையின்போது, அந்த பகுதியில் தீவிரமாக செயல்பட்டுவரும் மூத்த நக்சல்கள் பலர் படுகாயமடைந்ததாக கூறப்படுகிறது.
கடந்த ஆண்டில் இருந்து நக்சல்களுக்கு எதிராக பாதுகாப்பு படையினர் மேற்கொண்டுவரும் நடவடிக்கையில் இதுவரை, நூற்றுக்கணக்கான நக்சல்களின் மறைவிடங்கள் மற்றும் பதுங்கு குழிகள் தாக்கி அழிக்கப்பட்டுள்ளன. மேலும், நக்சல்கள் வசம் இருந்த ஏராளமான வெடிபொருட்கள், உணவுப் பொருட்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.