சாலை விபத்தில் காயமடைந்தால் இனி இலவச சிகிச்சை: மத்திய அரசு

கடந்த 14 மார்ச் 2024-ல் சோதனை அடிப்படையில் இந்த திட்டத்தை மத்திய அரசு தொடங்கியது.
சாலை விபத்து - கோப்புப்படம்
சாலை விபத்து - கோப்புப்படம்ANI
1 min read

நாடு முழுவதும் சாலை விபத்தில் காயமடைபவர்களுக்கான பணமில்லா இலவச சிகிச்சை திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் ஒரு நபருக்கு அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம் வரை இலவசமாக சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம்.

இது தொடர்பாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் வெளியிட்ட அரசாணையின்படி, இந்தத் திட்டம் நேற்று (மே 5) முதல் அமலுக்கு வந்துள்ளது,

` எந்தவொரு சாலையிலும், மோட்டார் வாகனத்தைப் பயன்படுத்துவதால் ஏற்படும் சாலை விபத்தால் பாதிக்கப்படும் எந்தவொரு நபரும், இந்தத் திட்டத்தின் கீழ் பணமில்லா சிகிச்சையைப் பெற உரிமை உள்ளது. விபத்து நடந்த நாளில் இருந்து அதிகபட்சமாக 7 நாட்கள் வரையிலும், ரூ. 1 லட்சத்து ஐம்பதாயிரம் வரையிலும், எந்தவொரு தேர்தெடுக்கப்பட்ட மருத்துவமனையிலும் பாதிக்கப்பட்டவர்கள் பணமில்லா சிகிச்சைபெற உரிமை உண்டு’ என்று அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

காவல்துறை, மருத்துவமனைகள் மற்றும் மாநில சுகாதார அமைப்புகளுடன் இணைந்து, இந்த `சாலை விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான பணமில்லா சிகிச்சை திட்டத்தை’ தேசிய சுகாதார ஆணையம் செயல்படுத்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாநில அளவில், `மாநில சாலை பாதுகாப்பு கவுன்சில்’ இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான அதிகாரம் பெற்ற அமைப்பாகத் திகழும்.

இந்த திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்படும் மருத்துவமனைகளைத் தவிர வேறு மருத்துவமனைகளில், காயத்தால் பாதிக்கப்பட்டவர்கள் முதலுதவி சிகிச்சை பெற மட்டுமே அனுமதி உள்ளது. அது தொடர்பான வழிகாட்டுதல் நெறிமுறைகள் வெளியிடப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த 14 மார்ச் 2024-ல் சோதனை அடிப்படையில் இந்த திட்டத்தை மத்திய அரசு தொடங்கியது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in