
துபாயில் சாலைகளை மேம்படுத்த அந்நாட்டு இளவரசர் தன்னை அழைத்ததாக மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் தற்போது பல ஆயிரம் கிலோ மீட்டருக்கு தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணிகள் நடந்துவருகின்றன. இந்நிலையில் துபாயில் சாலை திட்டங்களை மேம்படுத்தத் தன்னை துபாய் இளவரசர் அழைத்ததாக மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி பேசி ஆச்சர்யப்படுத்தியுள்ளார்.
மஹாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், ”இந்தியா வந்திருந்த துபாய் இளவரசர் பிரதமர் மோடியிடம் தயவுசெய்து கட்கரியை 6 மாதங்களுக்கு துபாய்க்கு அனுப்பி வையுங்கள் என்று கேட்டார்கள். இதற்கான காரணம், எனது தலைமையிலான நெடுஞ்சாலைத்துறை உலக சாதனை செய்துள்ளது. அருணாசலப் பிரதேசம், மேஹாலயா, திரிபுரா ஆகிய இடங்களில் சிறப்பான முறையில் சாலைத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டுநர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்”
இவ்வாறு பேசினார்.