
இந்தியா பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் மாலை 5 மணி முதல் அமலுக்கு வந்ததாக மத்திய வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரி அறிவித்துள்ளார்.
தில்லியில் இன்று (மே 10) மாலை 6 மணிக்கு நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் விக்ரம் மிஸ்ரி கூறியதாவது,
`பாகிஸ்தானின் இராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல் (DGMO) இன்று (மே 10) பிற்பகல் 3:35 மணிக்கு இந்திய இராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரலை தொலைபேசியில் அழைத்துப் பேசினார்.
இந்திய நேரப்படி மாலை 5 மணி தொடங்கி நிலம், வான்வழி மற்றும் கடல் என அனைத்து தடங்களிலும் துப்பாக்கிச் சூடு மற்றும் இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவதற்காக இரு தரப்பினருக்கும் இடையே உடன்பாடு எட்டப்பட்டது. இந்த புரிதலை செயல்படுத்த இரு தரப்பினருக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
இரு நாடுகளின் இராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர்கள் ஜெனரல்கள் மே 12-ம் தேதி 12.00 மணியளவில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவார்கள்’ என்றார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்காமல் விக்ரம் மிஸ்ரி அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.
முன்னதாக, இந்தியாவும் பாகிஸ்தானும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தன் ட்ரூத் சோஷியல் சமூக வலைதளக் கணக்கில் அறிவித்தார்.