18வது மக்களவையின் முதல் கூட்டத்தொடரில் பங்கேற்கும் முன்பு `அரசியலமைப்புச் சட்டத்தின் மீது பிரதமரும், அமித் ஷாவும் தாக்குதல் நடத்துவதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. அதனால்தான் உறுதிமொழி ஏற்கும்போது அரசியலமைப்புச் சட்டப் புத்தகங்களை எங்கள் கைகளில் ஏந்தினோம். எந்த சக்தியாலும் அரசியலமைப்புச் சட்டத்தின் மீது கைவைக்க முடியாது என்ற நாங்கள் உணர்த்த விரும்புகிறோம்’ எனத் தெரிவித்தார் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல் 15 நாட்களில் நடந்த 10 முக்கியப் பிரச்சனைகளைத் தன் எக்ஸ் பக்கத்தில் பட்டியலிட்டுள்ளார் ராகுல் காந்தி. பட்டியல் பின்வருமாறு:
கோர ரயில் விபத்து, காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல், ரயில் பயணிகளின் அவல நிலை, நீட் ஊழல், நீட் முதுநிலைத் தேர்வு ஒத்திவைப்பு, தண்ணீர்ப் பற்றாக்குறை, வெப்ப அலையால் ஏற்பட்ட உயிரிழப்புகள், NET தேர்வு ரத்து, காட்டுத்தீ பாதிப்புகள் மற்றும் பால், கேஸ், பருப்பு, சுங்கச்சாவடி விலையேற்றங்கள்.
`தன் அரசைக் காப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார் நரேந்திர மோடி. மக்களின் குரலை இண்டியா (கூட்டணி) எழுப்பி அரசுக்கு அழுத்தம் கொடுப்போம். பொறுப்பைத் தட்டிக் கழிக்கப் பிரதமரை அனுமதிக்கமாட்டோம்’ எனவும் தன் பதிவில் குறிப்பிட்டுள்ளார் ராகுல் காந்தி.
இடைக்கால சபாநாயகராக பாஜக எம்.பி பர்த்ருஹரி மகதாப் நியமிக்கப்பட்டதை எதிர்த்து நாடாளுமன்றக் கட்டடத்துக்கு வெளியே காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றக் குழுத்தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எம்.பி.க்கள் அரசியலமைப்புச் சட்டப் புத்தகங்களைக் கையில் ஏந்திப் போராட்டம் நடத்தினார்கள்.
`ஆளும் கட்சி அவர்களின் அகந்தையை மறக்கவில்லை. நாட்டின் முக்கியமான மக்களை அவர்கள் புறக்கணிக்கின்றனர். கே.சுரேஷை இடைக்கால சபாநாயகராக நியமித்திருந்தால் வரலாற்றுச் சிறப்பான காட்சியை நாட்டிலுள்ள தலித் மக்கள் பார்த்திருப்பார்கள். காங்கிரஸ், பாஜக மட்டுமல்லாமல் தலித் மக்களையும் பாஜக புறக்கணித்துள்ளது’ எனக் காங்கிரஸ் கட்சி எம்.பி கௌரவ் கோகாய் தெரிவித்தார்.