நான்காம் கட்ட வாக்குப்பதிவு: தேர்தல் பிரசாரம் நிறைவு

ஆந்திரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரசாரமும் மாலை 6 மணியுடன் நிறைவடைந்துள்ளது.
நான்காம் கட்ட வாக்குப்பதிவு: தேர்தல் பிரசாரம் நிறைவு

மக்களவைத் தேர்தலுக்கான நான்காம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் 96 தொகுதிகளில் இன்று மாலை தேர்தல் பிரசாரம் நிறைவடைந்தது.

நாடு முழுக்க மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழ்நாட்டிலுள்ள 39 தொகுதிகள் உள்பட 102 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 19-ல் நடைபெற்றது. கேரளம், கர்நாடகம், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், மஹாராஷ்டிரம் என 13 மாநிலங்களில் 88 தொகுதிகளில் ஏப்ரல் 26-ல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.

கோவாவில் இரு தொகுதிகள், குஜராத்தில் 26 தொகுதிகள், சத்தீஸ்கரில் 7 தொகுதிகள் மற்றும் கர்நாடகத்தில் 14 தொகுதிகள் உள்பட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 93 மக்களவைத் தொகுதிகளில் மே 7-ல் வாக்குப்பதிவு நடைபெற்றது.

10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் 96 மக்களவைத் தொகுதிகளில் மே 13-ல் நான்காம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

ஆந்திரப் பிரதேசத்தில் மொத்தமுள்ள 25 தொகுதிகள், தெலங்கானாவில் மொத்தமுள்ள 17 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. பிஹாரில் 5, ஜார்க்கண்டில் 4, மத்தியப் பிரதேசத்தில் 8, மஹாராஷ்டிரத்தில் 11, ஒடிசாவில் 4, உத்தரப் பிரதேசத்தில் 13, மேற்கு வங்கத்தில் 8, ஜம்மு-காஷ்மீரில் 1 என 96 தொகுதிகளில் நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இதற்கான தேர்தல் பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது.

ஆந்திரப் பிரதேசத்தில் மக்களவைத் தேர்தலுடன் சட்டப்பேரவைத் தேர்தலும் நடைபெறுகிறது. மே 13-ல் ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளதால், இதற்கான தேர்தல் பிரசாரமும் இன்று மாலையுடன் நிறைவடைந்தது. ஒடிஷாவிலும் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. அங்கு சட்டப்பேரவைத் தேர்தல் நான்கு கட்டங்களாக நடைபெறுகிறது. இதற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெறுகிறது.

ஆந்திரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரசாரமும் மாலை 6 மணியுடன் நிறைவடைந்துள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in