மும்பைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் என சந்தேகிக்கப்படும் நபர் 24 மணி நேரத்தில் மும்பை காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
விநாயகர் சதுர்த்தி விழாவின் 10 நாள் கொண்டாட்டம் இன்று நிறைவடைகிறது. விநாயகர் சிலைகளைக் கரைக்கும் நிகழ்வு மும்பை முழுக்க நடைபெறுகிறது.
ஆனால், இதுதொடர்பாக மும்பை போக்குவரத்துக் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. மிரட்டல் விடுத்தவர் தன்னை லஷ்கர்-ஏ-ஜிஹாதி என்று அடையாளப்படுத்தியிருக்கிறார். 14 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாகவும் அவர் மிரட்டலில் தெரிவித்திருந்தார்.
வாகனங்களில் 34 மனித வெடிகுண்டுகள் தயாராக இருப்பதாகவும் 400 கிலோ ஆர்டிஎக்ஸ் வெடிபொருள் பயன்படுத்தப்படவுள்ளதாகவும் 1 கோடி பேர வரை கொல்லப்படலாம் என்றும் தனது மிரட்டலில் அவர் குறிப்பிட்டிருந்ததாகத் தகவல் வெளியானது.
இந்த மிரட்டலைத் தொடர்ந்து, மும்பை முழுக்க பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு உள்ளிட்ட விசாரணை அமைப்புகளிடம் தகவல் தெரிவிக்கப்பட்டன. வதந்திகள் எதையும் நம்ப வேண்டாம் என காவல் துறை சார்பில் கோரப்பட்டது.
இந்நிலையில், மிரட்டல் விடுத்தவராகச் சந்தேகிக்கப்படும் நபரை மும்பை காவல் துறையினர் கைது செய்துள்ளார்கள். உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் வைத்து மும்பை குற்றப்பிரிவினரால் இவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
குற்றச்சம்பவத்துக்குப் பயன்படுத்தப்பட்ட மொபைல் ஃபோன் மற்றும் சிம் கார்ட் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவர் சிம் கார்ட் பெறுவதற்கு உதவிய நபரையும் மும்பை காவல் துறை கைது செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மக்கள் யாரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் நேரடியாகக் காவல் துறையை அணுகலாம் என்றும் காவல் துறை சார்பில் மீண்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Mumbai | Bomb Threat | Vinayagar Chathurthi | Vinayagar Chathurthi Festival | Mumbai Police