தில்லி, பிஹார் என இரு தேர்தல்களிலும் வாக்களித்த பாஜக தலைவர்கள்: ராகுல் காந்தி | Rahul Gandhi |
தில்லி தேர்தலில் வாக்களித்த பாஜக தலைவர்கள் பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலிலும் வாக்களித்தது குறித்து தான் அறிய வந்ததாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் முதற்கட்ட வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. மொத்தம் 64.66% வாக்குகள் பதிவாகின. இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நவம்பர் 11 அன்று நடைபெறுகிறது. நவம்பர் 14 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
இரண்டாம் கட்ட தேர்தலுக்காக காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி பிஹாரில் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். பிரசார உரையில், தில்லி தேர்தலில் வாக்களித்த பாஜக தலைவர்கள் பிஹார் முதற்கட்ட தேர்தலிலும் வாக்களித்துள்ளார்கள் என்று அவர் விமர்சனம் வைத்தார்.
ராகுல் காந்தி பேசியதாவது:
"தில்லி தேர்தலில் வாக்களித்த பாஜக தலைவர்கள் பிஹார் முதற்கட்ட தேர்தலிலும் வாக்களித்துள்ளது பற்றி நேற்று எனக்குத் தெரிய வந்தது. ஹரியாணாவில் மொத்தம் 2 கோடி வாக்காளர்கள். இதில் 29 லட்சம் வாக்காளர்கள் போலி வாக்காளர்கள். மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ஹரியாணாவில் பாஜக வாக்குத் திருட்டில் ஈடுபட்டுள்ளது. இதைப் பிஹாரிலும் செய்ய முயற்சிக்கிறார்கள். ஆனால், பிஹார் மக்கள் தங்களுடைய மாநிலத்தில் இதை அனுமதிக்க மாட்டார்கள் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்" என்றார் ராகுல் காந்தி.
தில்லியில் வாக்களித்தவர்களில் பிஹாரிலும் வாக்களித்துள்ளார்கள் என்ற குற்றச்சாட்டை வைக்கும்போது யாருடைய பெயரையும் அவர் குறிப்பிடவில்லை. எனினும், ஆர்எஸ்எஸ் ஆதரவாளர் ராகேஷ் சின்ஹா மற்றும் தில்லி பாஜகவைச் சேர்ந்த சந்தோஷ் ஓஜா மற்றும் நாகேந்திர குமார் ஆகியோர் தில்லி மற்றும் பிஹார் தேர்தல்களில் வாக்களித்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
ராகேஷ் சின்ஹா இதுகுறித்து விளக்கமளித்துள்ளார். தில்லியிலிருந்த தனது வாக்குரிமையை பிஹாருக்கு மாற்றிவிட்டதாக அவர் தனது பதிவில் குறிப்பிட்டிருந்தார். மேலும், குற்றம் சுமத்தியவர்கள் மீது அவதூறு வழக்கைத் தொடுக்கவுள்ளதாகவும் ராகேஷ் சின்ஹா தெரிவித்தார்.
BJP leaders who casts vote in Delhi, vote in Bihar 1st phase poll too, says Rahul Gandhi
Rahul Gandhi | Bihar Election | Bihar Elections | Delhi Election |

