
பிஹாரில் எல்லா குடும்பங்களிலிருந்தும் யாரேனும் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் வாக்குறுதியளித்துள்ளார்.
பிஹாரில் நவம்பர் 6 மற்றும் நவம்பர் 11 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. நவம்பர் 14 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குறுதியாக வீட்டுக்கு ஓர் அரசு வேலை வழங்கப்படும் என தேஜஸ்வி யாதவ் வாக்குறுதியளித்துள்ளார்.
செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது:
"பிஹாரில் எங்களுடைய ஆட்சி அமைந்த பிறகு, எல்லா குடும்பங்களிலிருந்தும் யாரேனும் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படுவது உறுதி செய்யப்படும். ஆட்சியமைத்த 20 நாள்களில் இதற்கெனப் புதிய சட்டம் உருவாக்கப்படும். 20 மாதங்களில் அரசு வேலை இல்லாத வீடே இல்லை என்பது உறுதி செய்யப்படும்" என்றார் தேஜஸ்வி யாதவ்.
ஆட்சியமைத்த பிறகு முதல் அமைச்சரவைக் கூட்டத்திலேயே இதற்கான ஒப்புதலில் கையெழுத்திடப்படும் எனத் தெரிவித்த தேஜஸ்வி யாதவ், "இது முதல் அறிவிப்பு மட்டுமே, இறுதியானது அல்ல. இன்னும் பல அறிவிப்புகள் வரவுள்ளன" என்றார்.
பிஹாரில் பாஜக மற்றும் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகின்றன. ராஷ்ட்ரீய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கூட்டணியாகக் களம் காண்கின்றன. பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி புதிதாகக் களமிறங்குகிறது. தனித்துப் போட்டியிடுவதாக பிரசாந்த் கிஷோர் அறிவித்துள்ளார். லோக் ஜனசக்தியின் சிராக் பாஸ்வான் பாஜகவுடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அசாதுதீன் ஒவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சியும் இந்தத் தேர்தலில் கடும் போட்டியளிக்கவுள்ளது. பிஹாரில் வீட்டுக்கு ஓர் அரசு வேலை: தேஜஸ்வி யாதவ் வாக்குறுதி!
Bihar | Bihar Election | Bihar Elections | RJD | Tejashwi Yadav | Rashtriya Janata Dal | Government Jobs | Poll Promise |