அஹமதாபாத் விமான விபத்து: விசாரணை அறிக்கைக்கு விமானிகள் சங்கம் எதிர்ப்பு

"விசாரணையில் வெளிப்படைத்தன்மை இல்லை, தொடர்ந்து ரகசியம் காக்கப்பட்டு வருகிறது."
அஹமதாபாத் விமான விபத்து: விசாரணை அறிக்கைக்கு விமானிகள் சங்கம் எதிர்ப்பு
ANI
2 min read

| Ahmedabad Air India Plane Crash | ALPA

அஹமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து குறித்த விமான விபத்துகளுக்கான விசாரணை அமைப்பின் அறிக்கைக்கு இந்திய விமானிகள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

விபத்து

குஜராத் மாநிலம் அஹமதாபாத் விமான நிலையத்தில் இருந்து கடந்த ஜுன் 12 அன்று லண்டனை நோக்கிப் புறப்பட்ட ஏர் இந்தியாவின் போயிங் 787-8 ட்ரீம்லைனர் ரக விமானம் (Air India flight AI171), புறப்பட்ட சில வினாடிகளிலேயே பி.ஜே. மருத்துவக் கல்லூரி விடுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் குறைந்தபட்சம் 260 பேர் வரை உயிரிழந்தார்கள். விமானத்தில் பயணித்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்தார்கள்.

விபத்து குறித்த விசாரணை அமைப்பின் அறிக்கை

விமான விபத்து பற்றி விமான விபத்துகளுக்கான புலனாய்வு அமைப்பு (AAIB) விசாரணை நடத்தி வருகிறது. இந்த அமைப்பு 15 பக்கங்கள் கொண்ட முதற்கட்ட விசாரணை அறிக்கையை மத்திய அரசிடம் தாக்கல் செய்துள்ளது. இந்த அறிக்கையின்படி, விமானத்தில் என்ஜின்களுக்கான எரிபொருள் விநியோகம் தடைபட்டிருக்கிறது. இதற்கான ஸ்விட்ச் கட் ஆஃப் செய்யப்பட்டுள்ளது. ஒரு விமானி எதற்காக கட் ஆஃப் செய்தாய் என்று கேட்டிருக்கிறார். இதற்கு சக விமானி நான் கட் ஆஃப் செய்யவில்லை எனப் பதிலளித்திருக்கிறார்.

என்ஜின்களுக்கான இரு ஸ்விட்ச்களும் செயல்பாட்டுக்கு வந்துள்ளன. இருந்தபோதிலும், ஒரு என்ஜின் மட்டுமே பகுதியளவு செயல்பாட்டுக்கு வந்துள்ளது. மற்றொர என்ஜின் செயல்பாட்டுக்கு வரவில்லை என்பது கருப்புப் பெட்டி தரவுகள் மூலம் தெரியவந்துள்ளன. விமான நிலைய சிசிடிவி காட்சிகள் மூலம் ரேட் அமைப்பு செயல்பாட்டுக்கு வந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. என்ஜின்கள் செயலிழக்கும்போது, ரேட் அமைப்பு மூலம் விமானத்தை ஓரளவுக்குக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு முடியும். இதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

பறவைகள் மோதல் எதுவும் நிகழவில்லை, விமானத்தில் சரியான எடையிலேயே பொருள்கள் இருந்துள்ளன, அபாயகரமான பொருள்கள் எதுவும் இல்லை என்று விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமானிகள் சங்கம் எதிர்ப்பு

இந்த அறிக்கை இந்திய விமானிகள் சங்கம் (Airline Pilots Association of India - ALPA) சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்துக்கு விமானிகள் காரணம் என்ற முடிவுக்கு விசாரணை அறிக்கை வருவது போல் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

இந்திய விமானிகள் சங்கத் தலைவர் சாம் தாமஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

"விமான விபத்துகளுக்கான புலனாய்வு அமைப்பின் அறிக்கை எந்தவொரு அதிகாரியின் கையொப்பமும் இல்லாமல் யார் வெளியிட்டது என்பது தெரியப்படுத்தாமல் ஊடகங்களிடம் பகிரப்பட்டுள்ளது. விசாரணையில் வெளிப்படைத்தன்மை இல்லை. விசாரணை தொடர்ந்து ரகசியம் காக்கப்பட்டு வருகிறது. தகுதிவாய்ந்தவர்கள், அனுபவமிக்கவர்கள், விமானிகள் யாரும் விசாரணைக் குழுவில் இன்னும் சேர்க்கப்படவில்லை. விமானியின் தவறு என அறிக்கை அனுமானிக்கிறது. விசாரணையின் தொனியும் திசையும் விமானியின் பக்கம் தவறு இருப்பதாக பக்க சார்பு நிலையை எடுப்பதைப்போல உள்ளது. இந்த அனுமானத்தை நிராகரித்து, நேர்மையான உண்மையின் அடிப்படையிலான விசாரணையை இந்திய விமானிகள் சங்கம் வலியுறுத்துகிறது. வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வை உறுதிசெய்ய விசாரணை நடைமுறையில் இந்திய விமானிகள் சங்கம் சேர்க்கப்பட வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in