
அயோத்தி ராமர் கோயில் தலைமை அர்ச்சகரின் உடல் சரயு நிதியில் வீசி ஜனசமாதி செய்யப்பட்டது.
அயோத்தி ராமர் கோயில் தலைமை அர்ச்சகர் மஹந்த் சத்யேந்திர தாஸ் (87) நீண்ட நாள்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். பிப்ரவரி 3 முதல் லக்னௌவிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த அவர் கடந்த புதன்கிழமை காலமானார்.
அயோத்தியில் பெரும் புகழ்பெற்றவர் சத்யேந்திர தாஸ். ராமர் கோயில் பற்றிய தகவல்களைச் சேகரிக்க வேண்டுமானால், சத்யேந்திர தாஸை அணுகலாம்.
சிறு வயதில் கல்வியைப் பெறுவதற்காக வீட்டைவிட்டு வெளியேறினார். அவர் வந்தடைந்த இடம் வாரணாசி. கல்விக்குத் தேவையான பொருளை ஈட்ட முடியாததால், அயோத்தி சென்றடைந்தார். அங்கு மஹந்த் அபிராம் தாஸ் இவரைச் சந்தித்தார். இவரை ஆசிர்வதித்த அபிராம் தாஸ், கல்வியைப் பெறுவதற்காக சத்யேந்தர் தாஸை வாரணாசிக்கு அனுப்பி வைத்தார்.
5 ஆண்டுகள் சமஸ்கிருதம் பயின்ற சத்யேந்தர் தாஸ் 1978-ல் அயோத்தி திரும்பினார். 1981-ல் ராமர் கோயில் இயக்கத்தில் ஐக்கியம் ஆனார். விஷ்வ ஹிந்து பரிஷத் தலைமையிடம் நெருக்கமானார். கடந்தாண்டு ஜனவரியில் ராமர் கோயில் கட்டப்பட்ட பிறகு, தலைமை அர்ச்சகர் பொறுப்பிலிருந்து தன்னை விடுவிக்குமாறு கேட்டுக்கொண்டார். எனினும், கோயில் அறக்கட்டளை சத்யேந்தர் தாஸை தலைமை அர்ச்சகராகத் தொடருமாறு கேட்டுக்கொண்டது.
மஹந்த் சத்யேந்தர் தாஸ் மறைவைத் தொடர்ந்து, பொதுமக்கள் அஞ்சலி செலுத்த வழிவகை செய்யப்பட்டது. இறுதிச் சடங்கைத் தொடர்ந்து, சத்யேந்திர தாஸ் உடல் சரயு நதியில் வீசப்பட்டு ஜலசமாதி செய்யப்பட்டது.