
உத்தரகண்டின் பத்ரிநாத் பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கிய தொழிலாளர்களில் 10 பேர் மீட்கப்பட்ட நிலையில், மீதமிருக்கும் 47 பேர் இன்னும் பனிச்சரிவில் புதையுண்டிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.
உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற ஆன்மீகத் தலமான பத்ரிநாத்திற்கு வடக்கே மானா கிராமம் உள்ளது. இந்த கிராமத்திற்கு அருகே எல்லைப்புறச் சாலை அமைப்பால் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இந்த பணிகளுக்காக ஒப்பந்த அடிப்படையில் தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்தார்கள்.
இந்நிலையில், கடந்த ஓரிரு நாட்களாக மானா கிராமத்திற்கு அருகே பெய்த பனிப்பொழிவைத் தொடர்ந்து, அப்பகுதியில் பனிச்சரிவு ஏற்பட்டு அங்கு வேலை பார்த்துக்கொண்டிருந்த தொழிலாளர்கள் அதில் சிக்கிக்கொண்டார்கள்.
பனிச்சரிவில் சிக்கிய 10 தொழிலாளர்கள் இதுவரை மீட்கப்பட்ட நிலையில், மேலும் 47 தொழிலாளர்கள் பனிச்சரிவில் புதையுண்டிருப்பதாக கூறப்படுகிறது. மீட்கப்பட்ட 10 தொழிலாளர்களுக்கு அருகில் உள்ள ராணுவ முகாமில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக, உத்தரகண்ட காவல்துறை அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தன் எக்ஸ் கணக்கில் உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி வெளியிட்ட பதிவில் கூறியதாவது,
`சமோளி மாவட்டத்தில் மானா கிராமத்திற்கு அருகே, எல்லைப்புறச் சாலைகள் அமைப்பினால் மேற்கொள்ளப்பட்டு வந்த கட்டுமானப் பணியின்பொது, பனிச்சரிவு ஏற்பட்டு பல தொழிலாளிகள் புதையுண்ட சோகமான செய்தி வந்தடைந்தது. நிவாரண மற்றும் மீட்புப் பணிகளில் ஐடிபிபி, பிஆர்ஓ மற்றும் பிற மீட்புப் குழுக்கள் ஈடுபட்டு வருகின்றன. அனைத்து தொழிலாள நண்பர்களின் பாதுகாப்பிற்காக கடவுள் பத்ரி விஷாலிடம் நான் வேண்டிக்கொள்கிறேன்’ என்றார்.
இதுவரை மேற்கொள்ளப்பட்ட மீட்புப் பணிகள் தொடர்பாக எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை. அதேநேரம், கடந்த இரு நாட்களாக அப்பகுதியில் கடுமையான பனிப்பொழிவு நிகழ்ந்துள்ளதால், மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.