தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், காவலில் இருந்தபடியே ஆட்சியை நடத்தும் முடிவுக்கு உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனை கட்சி எம்.பி. சஞ்சய் ரெளத் ஆதரவு தெரிவித்துள்ளார்.
அரவிந்த் கெஜ்ரிவாலைக் கண்டு பிரதமர் நரேந்திர மோடி பயப்படுத்துவதாகக் கூறிய சஞ்சய் ரெளத், கைதுக்குப் பின் கெஜ்ரிவால் மிகவும் ஆபத்தானவர் என்றும் குறிப்பிட்டார்.
சுதந்திரப் போராட்ட வீர்ர்களுடன் கெஜ்ரிவாலை ஒப்பிட்ட ரெளத், சுதந்திரப் போராட்டத்தில் சிறைக்குச் சென்று வந்தவர்கள் மேலும் வலுவானவர்களாக இருந்ததைச் சுட்டிக்காட்டினார்.
இண்டியா எதிர்க்கட்சிக் கூட்டணி தில்லி ராம்லீலா மைதானத்தில் கண்டனப் பேரணி நடத்த உள்ளது. நாங்கள் அனைவரும் அதில் பங்கேற்போம். பிரதமர் மோடி, கெஜ்ரிவாலைக் கண்டு பயப்படுகிறார். சிறையிலிருந்து கொண்டு செயல்படும் அவர் மிகவும் ஆபத்தானவர். மக்கள் அவருக்கு ஆதரவாக நிற்கிறார்கள். அவரை உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள் என்றார் சஞ்சய் ரெளத்.
தொகுதிப் பங்கீடு குறித்த கேள்விக்கு பதிலளித்த ரெளத், தேர்தலில் போட்டியிடும் தங்கள் கட்சியின் 15 அல்லது 16 வேட்பாளர்களின் பட்டியல் செவ்வாய்க்கிழமை வெளியிடப்படும் என்றார்.
தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பான விவகாரத்தில் தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார். அவரை இந்த மாதம் 28 வரை அமலாக்கத்துறை காவலில் வைக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
இதனிடையே அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து இண்டியா எதிர்க்கட்சி கூட்டணியில் இடம்பெற்றுள்ள அரசியல் கட்சிகள் மார்ச் 31 அன்று தில்லியில் மாபெரும் பேரணியை நடத்த உள்ளதாக ஆம் ஆத்மி கட்சி எம்.பி. ராகவ் சதா தெரிவித்தார்.
ஜனநாயகத்தைக் காப்பாற்றும் நோக்கிலும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு முழு ஆதரவை தெரிவிக்கும் வகையிலும் அனைவரும் ஒன்று திரண்டு இந்த பேரணி நடத்தப்பட உள்ளதாக அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளார்.