தேர்தல் பிரசாரத்தின் போது ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி மீது மர்ம நபர் ஒருவர் கல்வீசி தாக்குதல் நடத்தியதில் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது.
ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், ஆந்திர முதல்வருமான ஜெகன் மோகன் ரெட்டி, ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார்.
சாலை பேரணியின் போது பேருந்தில் நின்றபடி தேர்தல் பரப்புரையை மேற்கொண்டிருந்த ஜெகன் மோகன் ரெட்டி மீது மர்ம நபர் ஒருவர் தூரத்திலிருந்து கல்லை வீசி தாக்கியாதகத் தெரிகிறது. அந்த கல் ஜெகன் மோகனின் நெற்றியில் பட்டதில், அவருக்கு சிறிய ரத்தக் காயம் ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து ஜெகன் மோகன் ரெட்டிக்கு உடனடியாக முதலுதவி செய்யப்பட்டது. இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆந்திர முதல்வர் மீது கல்வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஜெகன் மோகன் ரெட்டி விரைவில் குணமடைய வேண்டிக்கொள்வதாக பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும், ஆந்திர முதல்வர் மீதான தாக்குதலுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.