
பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து அனைத்து மாநில முதல்வர்களையும் வெள்ளிக்கிழமை அழைத்துப் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாகிஸ்தானைச் சேர்ந்தவர்களை அடையாளம் காணுமாறு கேட்டுக்கொண்டார்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் கடந்த செவ்வாய்க்கிழமை பிற்பகல் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்துள்ளார்கள். இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து, சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை ரத்து செய்வது உள்பட 5 முக்கிய முடிவுகளை இந்தியா எடுத்தது.
சார்க் விசா விலக்கு திட்டத்தின் கீழ் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் யாரும் இந்தியாவுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று இந்தியா அறிவித்தது. மேலும், இந்த விசா திட்டத்தின் மூலம் இந்தியா வந்த பாகிஸ்தானியர்கள் அனைவரும் 48 மணி நேரத்தில் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என இந்தியா புதன்கிழமை உத்தரவிட்டது. இது தவிர மருத்துவக் காரணங்களுக்காக வழங்கப்பட்ட விசா ஏப்ரல் 29 வரை மட்டுமே செல்லுபடியாகும் என்றும் இந்தியா அறிவித்தது.
இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அனைத்து மாநில முதல்வர்களையும் இன்று தொடர்புகொண்டு பேசினார். பாகிஸ்தானைச் சேர்ந்தவர்களை அடையாளம் கண்டு மத்திய அரசிடம் தெரிவிக்குமாறு அவர் அறிவுறுத்தினார். இந்தத் தகவலின் அடிப்படையில் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்களுடைய விசாக்கள் ரத்து செய்யப்படும் என அவர் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானியர்கள் அவர்களுடைய நாட்டுக்கு விரைவில் செல்வதை உறுதி செய்வதற்கான உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.