
காங்கிரஸ் எம்.பி.யும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி வசம் இரட்டை குடியுரிமை உள்ளதாக தொடரப்பட்ட பொதுநல வழக்கை அலஹாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னௌ அமர்வு தள்ளுபடி செய்துள்ளது.
கர்நாடகத்தைச் சேர்ந்த பாஜக உறுப்பினரான எஸ். விக்னேஷ் ஷிஷிர் என்பவர், இந்தியா மற்றும் பிரிட்டன் என இரு நாடுகளின் குடியுரிமையை ராகுல் காந்தி வைத்திருப்பதாகவும், இதனால் அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு 84(ஏ)-வின் கீழ் தேர்தலில் போட்டியிட ராகுல் காந்திக்கு தகுதி இல்லை என்றும் கூறி அலஹாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னௌ அமர்வில் பொதுநல வழக்கைத் தாக்கல் செய்தார்.
கடந்த 2019-ல் அன்றைய மாநிலங்களவை எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி இரட்டை குடியுரிமை குறித்து அளித்த புகார் மனுவை அடுத்து, ராகுல் காந்திக்கு மத்திய உள்துறை அமைச்சகம் நோட்டீஸ் வழங்கியது.
பிரிட்டனில் செயல்பட்டு வந்த ஒரு நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுவில் இடம்பெற்றிருந்த ராகுல் காந்தி, அந்நிறுவனத்தின் ஆவணங்களில் தன்னை பிரிட்டன் குடிமகனாக அறிவித்ததாக அவர் குற்றம்சாட்டியிருந்தார்.
இதை ஒட்டியே, விக்னேஷ் ஷிஷிர் இந்த வழக்கை தொடர்ந்ததாக கூறப்படுகிறது. முன்னதாக இந்த வழக்கு விசாரணையின்போது, இங்கிலாந்து அரசிடமிருந்து தகவல்களை சரிபார்க்க மத்திய அரசு கூடுதல் அவகாசம் கோரியதை அடுத்து, உள்துறை அமைச்சகத்திற்கு 10 நாட்கள் அவகாசம் வழங்கியது உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கில் இன்று நடைபெற்ற விசாரணையின்போது இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக மத்திய அரசை பதில் மனுத்தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்ட உயர் நீதிமன்றம், விக்னேஷ் ஷிஷிர் மனுவைத் தள்ளுபடி செய்வது உத்தரவிட்டது.