பெங்களூரு குண்டுவெடிப்பில் தமிழர்களை தொடர்புபடுத்திப் பேசிய சர்ச்சையில் கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில், மன்னிப்பு கேட்டார் மத்திய இணையமைச்சர் ஷோபா கரந்த்லாஜே.
கர்நாடக மாநிலம் பெங்களூருவிலுள்ள ராமேஸ்வரம் கஃபேவில் மார்ச் 1-ல் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதில் 10-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தார்கள்.
இதைத் தொடர்ந்து இந்தச் சம்பவத்திற்குத் தமிழர்களே காரணம் என மத்திய இணையமைச்சர் ஷோபா கரந்த்லாஜே தெரிவித்தார். இதற்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
தமிழ்நாட்டின் முதல்வர் மு.க. ஸ்டாலின், “பெங்களூரு குண்டுவெடிப்பில் தமிழர்களை தொடர்புப்படுத்திப் பொறுப்பற்ற வகையில் பேசிய மத்திய இணையமைச்சர் ஷோபா கரந்த்லாஜேவுக்கு கடும் கண்டனம் தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.
இந்நிலையில் தான் பேசியதற்காக மன்னிப்பு கேட்டார் ஷோபா கரந்த்லாஜே.
இது குறித்து தனது X தளத்தில் அவர் கூறியதாவது:
“கிருஷ்ணகிரி வனப்பகுதியில் பயிற்சி பெற்றவர்கள் குறித்து மட்டுமே நான் பேசினேன். தமிழ்நாட்டில் யாரேனும் எனது கருத்தால் காயமடைந்திருந்தால் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.