
பாஜகவுடன் கூட்டணி வைத்ததில் அதிமுகவினர் சிலர் அதிருப்தியில் இருப்பதாகச் செய்திகள் வருகின்றன.
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி அமைத்துப் போட்டியிட முடிவு செய்துள்ளன. பாஜகவுடன் கூட்டணி வைத்ததில் அதிமுகவினருக்கு விருப்பம் இருக்கிறதா இல்லையா என்று தெரியவில்லை என்பது போன்ற கருத்துகள் ஆங்காங்கே அடிபட்டன.
இரு நாள்களுக்கு முன்பு கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த விசிக தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன், "பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்தால், நான் கட்சியிலிருந்தே வெளியேறிவிடுவேன் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சொல்லக்கூடிய அளவுக்கு அதிமுகவில் மாறுபட்ட கருத்துகள் ஏற்கெனவே இருந்தன. எந்தளவுக்கு அதிமுக தலைவர்கள் இதை ஏற்றுக்கொள்வார்கள் என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்" என்று கூறியிருந்தார்.
அதிமுக முன்னாள் ஜெயக்குமார் இன்று காலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது திருமாவளவனின் கருத்துக்கு விளக்கமளித்த அவர், "நான் எந்த நேரத்திலும் இதைப்போல சொல்லவில்லை. இது பொய்ச் செய்தி" என்றார்.
இந்நிலையில், அதிமுகவில் கள நிர்வாகிகள் சிலர் பாஜகவுடனான கூட்டணி மகிழ்ச்சியைத் தரவலில்லை என்பதை வெளிப்படுத்தியுள்ளார்கள். அதிமுக
திருப்பூர் மாநகர மாவட்ட அதிமுகவின் ஆலோசனைக் கூட்டம் முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் திருப்பூரில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய அதிமுக முன்னாள் எம்எல்ஏ குணசேகரன், பாஜகவுடன் கூட்டணி வைத்தது வருத்தமாக இருந்தாலும், இயக்கத்தைக் காப்பாற்ற வேண்டிய கடமை நமக்கு இருப்பதாகப் பேசியிருக்கிறார். இஸ்லாமியர்களுக்குத் துணையாக அதிமுக இருக்கும் என்றும் அவர் பேசியுள்ளார். அதிமுக முன்னாள் கவுன்சிலர் கண்ணப்பனும் இதே கருத்தை முன்வைத்துப் பேசியுள்ளார்.
இந்தச் செய்தி ஓய்வதற்குள் புதுக்கோட்டையில் அதிமுக நிர்வாகி கட்சிப் பொறுப்பை ராஜினாமா செய்துள்ளார்.1989 முதல் அதிமுகவில் இருந்து வந்ததாகச் சொல்லப்படும் முகமது கனி, சிறுபான்மையினர் அணியின் நகரச் செயலாளராக இருந்து வந்துள்ளார். பாஜகவுடன் கூட்டணி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து கட்சிப் பொறுப்பை இவர் ராஜினாமா செய்துள்ளதாகச் செய்தி வந்துள்ளது.