
உ.பி. மாநிலம் பிரயாக்ராஜில் அண்மையில் நிறைவுபெற்ற மஹா கும்பமேளா குறித்து கேள்விகளை எழுப்பி, விமர்சனங்களை முன்வைத்த எதிர்க்கட்சிகள் இந்து மதத்தை அவமதிப்பதாக கருத்து தெரிவித்துள்ளார் உ.பி. அமைச்சர் நிதின் அகர்வால்.
உ.பி. மாநிலம் பிரயாக்ராஜில் கடந்த ஜன.13-ல் தொடங்கி மஹா கும்பமேளா நிகழ்வு, 45 நாட்களுக்குப் பிறகு நேற்றைக்கு முந்தைய தினம் (பிப்.26) நிறைவுபெற்றது. இந்த நிகழ்வில் 65 கோடிக்கும் மேற்பட்டோர் புனித நீராடியதாக உ.பி. அரசு தகவல் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் உ.பி. மாநில அமைச்சரும், பாஜக தலைவருமான நிதின் அகர்வால் ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கும்பமேளா குறித்து கூறியதாவது,
`மஹா கும்பமேளா குறித்து தொடர்ச்சியாக கேள்வி எழுப்பி, ஆட்சேபனைக்குரிய கருத்துக்களை எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன. நமது பெருவிழா தொடங்குவதற்கு முன்பு ஆயுத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட்டபோதும், விழா நடைபெற்ற 45 நாட்களும் இவ்வாறு நடந்துள்ளது. சமாஜ்வாதியும், பிற எதிர்க்கட்சிகளும் தொடர்ச்சியாக சந்தேகங்களை எழுப்பியுள்ளன.
பிரதமர் நரேந்திர மோடியின் வழிகாட்டுதலின்பேரில் முதல்வர் யோகி ஆதித்யநாத் வெற்றிகரமாக இந்த நிகழ்வை நடத்தி முடித்துள்ளாார். இதில் 66 கோடி மக்கள் புனித நீராடிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. இருந்தாலும், இது தொடர்பாக சமாஜ்வாதி கட்சி கேள்வி எழுப்புவது இந்து மத நம்பிக்கையையும், பாரம்பரியத்தையும் அவமதிக்கும் செயலாகும்.
சனாதன தர்மத்தை சமாஜ்வாதி கட்சி தொடர்ந்து அவமதிக்கும் விதத்திற்கு 2027 பொதுத்தேர்தலில் உத்தரபிரதேச மக்கள் பதில் அளிப்பார்கள்’ என்றார்.