
ஆதார் அட்டையை வயது சான்றாகப் பயன்படுத்த முடியாது என்று தீர்ப்பு வழங்கியுள்ளது உச்ச நீதிமன்றம்.
கடந்த் 2015-ல் ஹரியாணா மாநிலம் ரோத்தக்கில் நடைபெற்ற சாலை விபத்தில் ஒருவர் மரணமடைந்தார். பள்ளி சான்றிதழ் அடிப்படையாக வைத்து மரணமடைந்த நபரின் வயதை 45 என ஏற்றுக்கொண்ட ரோத்தக் மோட்டார் விபத்து உரிமைகோரல் தீர்ப்பாயம், அவரது குடும்பத்துக்கு வழங்கவேண்டிய இழப்பீடாக ரூ. 19.35 லட்சத்தை அறிவித்தது.
ஆனால் இந்த விவகாரத்தில் மரணமடைந்த நபரின் ஆதாரை வைத்து, அவரது வயதை 47 என தீர்மானித்த பஞ்சாப்-ஹரியானா உயர் நீதிமன்றம், ரோத்தக் மோட்டார் விபத்து உரிமைகோரல் தீர்ப்பாயம் அறிவித்த இழப்பீட்டை ரூ. 9.22 லட்சமாகக் குறைத்தது. இதைத் தொடர்ந்து, பஞ்சாப்-ஹரியானா உயர் நீதிமன்றத்தின் முடிவை எதிர்த்து மரணமடைந்தவரின் குடும்பத்தினர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
மேல்முறையீடு வழக்கை விசாரித்த நீதிபதிகள் சஞ்சய் கரோல், உஜ்ஜல் புய்யான் ஆகியோரைக் கொண்ட அமர்வு, சாலை விபத்தில் மரணமடைந்தவரின் வயதை, சிறார் நீதி (குழந்தைகளின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டத்தின் பிரிவு 94-ன் அடிப்படையில், பள்ளி சான்றிதழை வைத்தே தீர்மானிக்க முடியும் என அறிவித்தது.
மேலும், ஆதாரை வழங்கும் இந்திய தனித்துவ அடையாள அமைப்பு 2023-ல் வெளியிட்ட 8-ம் சுற்றறிக்கையின்படி, ஆதாரை அடையாளச் சான்றாக பயன்படுத்த முடியும், வயது சான்றாக பயன்படுத்த முடியாது எனவும் தீர்ப்பளித்துள்ளனர் உச்ச நீதிமன்ற நீதிபதிகள்.