
ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதலை, உயிர் நீத்தவர்களுக்கான உண்மையான அஞ்சலி என்று பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் தந்தையை இழந்த அசாவரி ஜக்டாலே விவரித்துள்ளார்.
பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் உள்ள 9 பயங்கரவாத முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டதாக மத்திய பாதுகாப்புத் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உயிர் நீத்தவர்களுக்கான பழிவாங்கல் நடவடிக்கையாகவும், பயங்கரவாத தாக்குதலில் மூளையாக செயல்பட்ட லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்புகளைச் சேர்ந்தவர்களை அழித்தொழிக்கும் விதமாகவும் இந்திய ராணுவம் தாக்குதல் நடவடிக்கையை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.
1971-க்குப் பிறகு, பாகிஸ்தானுக்கு உள்ளே வெகு தூரம் இந்தியா ராணுவம் ஊடுருவி தாக்குதலை நடத்தியதாக சிஎன்என் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இதன் மூலம், ஏறத்தாழ ஐந்து தசாப்தங்களுக்குப் பிறகு அண்டை நாடான பாகிஸ்தான் மீது குறிப்பிடத்தக்க வகையிலான ராணுவ நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டுள்ளது.
இந்நிலையில், இது தொடர்பாக கடந்த ஏப்.22-ல் பஹல்காமில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் தன் தந்தை சந்தோஷ் ஜக்டாலேவை இழந்த அசாவரி ஜக்டாலே, ஏஎன்ஐ ஊடகத்திடம் கூறியதாவது,
`எங்கள் உறவினர்களிடம் இருந்து (ஆபரேஷன் சிந்தூர் குறித்து) எங்களுக்கு அழைப்புகள் வந்தன. இந்த வான்வழித் தாக்குதல்கள் மூலம் பஹல்காம் தாக்குதலுக்கு இந்தியா பழிவாங்கியுள்ளது. ராணுவ நடவடிக்கையின் பெயரைக் (சிந்தூர்) கேட்டதும் நான் மிகவும் உணர்ச்சிவசப்பட்டேன்.
வீர மரணமடைந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த அமித் ஷா ஸ்ரீநகருக்கு வந்தபோது, கணவர்களை இழந்த சகோதரிகள் அவரிடம் மன்றாடினர். அதனால்தான் இந்த நடவடிக்கைக்கு அத்தகைய பெயர் சூட்டப்பட்டுள்ளது என்று நினைக்கிறேன்.
இதை செய்ததன் மூலம் உயிரிழந்தவர்களுக்கான உண்மையான அஞ்சலியை இந்தியா செலுத்தியுள்ளது. 15 நாட்களுக்குள் நீதி நிலைநாட்டப்பட்டதற்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்’ என்றார்.
ஆபரேஷன் சிந்தூர் குறித்த விவரங்களை இன்று (மே.7) காலை 10 மணிக்கு மத்தியப் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிடவுள்ளது. இதைத் தொடர்ந்து, பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்புக்கான அமைச்சரவைக் கூட்டம் காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளது.
இதற்கிடையே, அமலில் உள்ள போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி எல்லைப் பகுதியில் நேற்று இரவு பாகிஸ்தான் ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 அப்பாவி இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்.