
மஹாராஷ்டித்தின் புனே நகரில் 26 வயது இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், குற்றவாளி தத்தாத்ரே ராம்தாஸ் கடேவை 75 மணிநேர தேடுதல் வேட்டைக்குப் பிறகு காவல்துறையினர் இன்று (பிப்.28) கைது செய்துள்ளார்கள்.
மகாராஷ்டிரத்தின் புனே நகரில் உள்ள ஸ்வர்கேட் பேருந்து நிலையத்தில் கடந்த பிப்.25 அன்று அதிகாலை 5.45 மணி அளவில், 26 வயது இளம்பெண் ஒருவர் பேருந்துக்காகக் காத்திருந்தார். அப்போது அந்த பெண்ணை அணுகிய மர்ம நபர் ஒருவர், அவர் செல்லவேண்டிய பேருந்து குறித்து விசாரித்துள்ளார்.
அந்த பெண், பால்தானுக்குச் செல்ல வேண்டும் என்று மர்ம நபரிடம் கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து, பால்தன் செல்லும் பேருந்து மற்றொரு நடைமேடையில் நிற்பதாகக் கூறி, இளம்பெண்ணை தன்னுடன் அழைத்து சென்றுள்ளார் மர்ம நபர்.
ஆள் நடமாட்டம் இல்லாத அந்த நடைமேடையில் நின்றுகொண்டிருந்த ஒரு குளிர்சாதனப் பேருந்தை கைகாட்டி, அது பால்தனுக்குச் செல்லும் என்று கூறி அதற்குள் இளம்பெண்ணை ஏறச்சொன்னார் மர்ம நபர். அந்த பேருந்திற்குள் இளம்பெண் ஏறி அமர்ந்ததும், பின் தொடர்ந்து ஏறிய மர்ம நபர் அவரை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பியோடியுள்ளார்.
தன் அடையாளத்தை மறைக்க இந்த வன்கொடுமை சம்பவத்தின்போது மர்ம நபர் முகக்கவசம் அணிந்திருந்தார். பாலியல் குற்றவாளியைக் கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறி மஹாராஷ்டிரத்தைச் சேர்ந்த காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டன.
இதைத் தொடர்ந்து, பேருந்து நிலையத்தின் சிசிடிவி காட்சிகளை பல்வேறு கோணங்களில் ஆய்வுசெய்து, ஏற்கனவே திருட்டு, செயின் பறிப்பு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 36 வயதான தத்தாத்ரே ராம்தாஸ் கடேதான் அந்த மர்ம நபர் என்பதை புனே நகர காவல்துறை கண்டறிந்தது.
அதன்பிறகு, ஷிரூர் பகுதியைச் சேர்ந்த குணாட் கிராமத்தில் கரும்பு வயல் பகுதியில் பதுங்கியிருந்த கடேவை அந்த கிராமத்தைச் சேர்ந்த 400-க்கும் மேற்பட்டோர் உதவியுடன், 500-க்கும் அதிகமான காவல்துறையினர் டிரோன்கள், மோப்ப நாய் குழுக்கள் ஆகியவற்றை உபயோகித்து தேடி, இன்று (பிப்.28) அதிகாலை 1.10 மணி அளவில் கைது செய்துள்ளார்கள்.