
யுசிஎஸ்சி குடிமைப்பணித் தேர்வு 2024-ன் இறுதி முடிவுகள் இன்று (ஏப்.22) வெளியாகியுள்ளன.
ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஃப்எஸ், ஐஆர்எஸ் போன்ற காலிப் பணியிடங்களுக்கான குடிமைப்பணித் தேர்வை ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணயம் எனப்படும் யுபிஎஸ்சி நடத்தும். அந்த வகையில் 2024-ம் ஆண்டிற்கான குடிமைப்பணித் தேர்வின் இறுதி முடிவுகளை இன்று (ஏப்.22) யுபிஎஸ்சி வெளியிட்டுள்ளது.
உ.பி. மாநிலத்தைச் சேர்ந்த ஷக்தி துபே தேசிய அளவில் முதலிடம் பெற்றுள்ளார். ஹர்ஷிதா கோயல் 2-வது இடத்தையும், டோங்ரே அர்சித் பராக் 3-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.
தமிழகத்தைச் சேர்ந்த சிவச்சந்திரன் தேசிய அளவில் 23-வது இடத்தைப் பிடித்துள்ளார். தமிழக அரசின் `நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் இவர் பயிற்சிபெற்றுள்ளார். மேலும், இந்த திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்றுள்ள மற்றொரு தேர்வரான தமிழகத்தைச் சேர்ந்த மோனிகா தேசிய அளவில் 39-வது இடத்தைப் பிடித்துள்ளார்.
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயிற்சிபெற்ற 50-க்கும் மேற்பட்ட தமிழக தேர்வர்கள் தேர்ச்சிபெற்றதாகக் கூறப்படுகிறது. அத்துடன் தமிழ் வழியில் முதன்மைத் தேர்வை எழுதிய காமராஜ் (614-வது இடம்) மற்றும் சங்கர் பாண்டியராஜ் (807-வது இடம்) ஆகியோரும் தேர்ச்சிபெற்றுள்ளனர்.
இந்த தேர்வின் மூலம் 1,009 காலிப்பணியிடங்களுக்கு, 725 ஆண் தேர்வர்களும், 284 பெண் தேர்வர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இறுதி முடிவுகள் தொடர்பான விவரங்களை அறிந்துகொள்ள (யுபிஎஸ்சி அலுவலகம்): 011-23385271, 23381125 and 23098543.