
சத்தீஸ்கரின் பிஜாப்பூர் மாவட்டத்தில் நக்ஸல்கள் மேற்கொண்ட வெடிகுண்டு தாக்குதல் இரண்டு சிறப்பு காவல் படை வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இதற்கு தன் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்த சத்தீஸ்கர் முதல்வர் விஷ்ணு தியோ சாய் `மாவோயிசத்தை ஒழிக்கும் வரை எங்களின் சண்டை தொடரும்’ என்று தன் எக்ஸ் கணக்கில் பதிவிட்டுள்ளார்.
பிஜாப்பூர் மாவட்டத்தின் தாரேம் வனப்பகுதியில் நேற்று (ஜூலை 17) இரவு மாவோயிஸ்டுகளைத் தேடும் வேட்டையில் சிறப்பு காவல் படையினர் ஈடுபட்டனர். ஜூலை 16-ல் கிடைத்த ரகசியத் தகவலை அடுத்து சிறப்பு காவல் படையினருடன், மாநில காவல்துறையினர், மத்திய ரிசர்வ் காவல் படையினரும் இந்தத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது நக்ஸல்கள் மேற்கொண்ட வெடிகுண்டுத் தாக்குதலில் சிறப்பு காவல் படையைச் சேர்ந்த பாரத் சாஹூ மற்றும் சத்யேர் சிங் காங்கே ஆகியோர் உயிரிழந்தனர். இந்த வெடிகுண்டு தாக்குதலில் நான்கு வீரர்களுக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது. அவர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதை அடுத்து நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர தாரேம் பகுதியில் கூடுதலாக பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த தாக்குதல் சம்பவம் குறித்து, `வீர மரணமடைந்த வீரர்களின் ஆன்மா சாந்தியடைய கடவுளைப் பிராத்திக்கிறேன். மாவோயிசத்தை ஒழிக்க எங்கள் அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை அடுத்து நக்ஸல்கள் கொழைத்தனமான செயலில் ஈடுபட்டுள்ளனர். பாதுகாப்பு வீரர்களின் மரணம் வீண்போகாது. மாவோயிசத்தை ஒழிக்கும் வரை எங்கள் சண்டை தொடரும்’ என்று தன் எக்ஸ் கணக்கில் பதிவிட்டுள்ளார் சத்தீஸ்கர் முதல்வர் விஷ்ணு தியோ சாய்.
கடந்த மாதம் சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் நடந்த நக்ஸலைட்டுகளின் வெடிகுண்டு தாக்குதலில் 2 மத்திய ரிசர்வ் காவல் படை வீரர்கள் மரணமடைந்தனர்.