
ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் அப்பாவி மக்கள் 13 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22 அன்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் நேபாளத்தைச் சேர்ந்த ஒருவர் உள்பட 26 பேர் உயிரிழந்தார்கள். இந்தத் தாக்குதலுக்குப் பதிலடி தரும் விதமாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலுள்ள 9 பயங்கரவாத முகாம்கள் இந்தியாவால் தாக்கி அழிக்கப்பட்டன. ஆபரேஷன் சிந்தூர் எனப் பெயர்சூட்டப்பட்டு இந்த ஆபரேஷன் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
இதனால், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே கடந்த இரு வாரங்களாக பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்தியா நடத்திய ஆபரேஷனுக்குப் பதிலடி தரும் விதமாக எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே பூஞ்சில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் அப்பாவி மக்கள் 13 பேர் உயிரிழந்துள்ளார்கள். மொத்தம் 59 பேர் காயமடைந்துள்ளார்கள்.
எல்லைப் பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருவதால் ஜம்மு பிராந்தியத்தில் 5 எல்லை மாவட்டங்களில் தொடர்ந்து இரண்டாவது நாளாகப் பள்ளிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் இந்தத் தாக்குதல் கிராம மக்கள் மத்தியில் பதற்றத்தை உண்டாக்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். கிராம மக்களின் வீடுகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. அச்சத்தில் வீட்டை விட்டு வெளியேறியதாகவும் இரு கட்டடங்கள் சேதமடைந்ததாகவும் கிராமவாசி ஒருவர் கூறினார்.
போர் நிறுத்த ஒப்பந்தத்தை பாகிஸ்தான் மீறி வருவதை இந்திய ராணுவம் உன்னிப்பாகக் கவனித்து வருகிறது.