

ராஜஸ்தானில் கார் உள்ளிட்ட பல வாகனங்கள் மீது லாரி அடுத்தடுத்து மோதிய விபத்தில் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகே ஹர்மதா பகுதியில் இன்று பிற்பகல் சாலையில் சென்று கொண்டிருந்த லாரி திடீரெனக் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் சாலையில் முன்னே சென்று கொண்டிருந்த கார் உள்ளிட்ட வாகனங்கள் மீது அடுத்தடுத்து மோதியது. சுமார் 300 மீட்டர் தூரத்திற்கு இழுத்துக் கொண்டு சென்றதில், லாரிக்கும் வாகனங்களுக்கும் இடையில் மக்கள் சிக்கினர். உடனே விரைந்து வந்த காவல்துறை மற்றும் தீயணைப்புப் படையினர், வாகனங்களுக்கு இடையில் சிக்கிய மக்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில் மொத்தம் 12 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் பலியானவர்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் அதிகம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள அம்மாநில முதல்வர் பஜன் லால் ஷர்மா, காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 24 மணி நேரத்தில் ராஜஸ்தானில் இது இரண்டாவது பெரிய சாலை விபத்தாகும். நேற்று (நவ.2) ஜோத்பூர் மாவட்டம் ஃபலோடி அருகே வேனில் வந்த பக்தர்கள் சென்ற வாகனம், சாலை ஓரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் சம்பவ இடத்திலேயே 15 பேர் உயிரிழந்தார்கள். இந்த விபத்தின் அதிர்ச்சி அடங்குவதற்கு முன் மற்றொரு விபத்து நடந்துள்ளது. இந்த இரு விபத்துகள் குறித்தும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதையடுத்து இதுபோன்ற கோர விபத்துகளைக் கட்டுப்படுத்த வாகன வேகக் கட்டுப்பாடு மற்றும் சாலை பராமரிப்பு மேம்படுத்தப்பட வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
12 killed in Rajasthan after lorry collides with several vehicles in Jaipur; 10 injured admitted to hospital.