
ஆபரேஷன் சிந்தூரில் 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22 அன்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் நேபாளத்தைச் சேர்ந்த ஒருவர் உள்பட 26 பேர் உயிரிழந்தார்கள். இந்தத் தாக்குதலுக்குப் பதிலடி தரும் விதமாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலுள்ள 9 பயங்கரவாத முகாம்கள் இந்தியாவால் தாக்கி அழிக்கப்பட்டன. ஆபரேஷன் சிந்தூர் எனப் பெயர்சூட்டப்பட்டு இந்த ஆபரேஷன் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
இதற்குப் பதிலடி தரும் விதமாக ஜம்மு-காஷ்மீரில் பூஞ்ச் மாவட்டத்தில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் அப்பாவி மக்கள் 13 பேர் உயிரிழந்தார்கள். ராணுவ வீரர் ஒருவரும் உயிரிழந்துள்ளார். 59 பேர் காயமடைந்துள்ளார்கள்.
இதனிடையே, மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஆபரேஷன் சிந்தூர் குறித்து அனைத்துக் கட்சி தலைவர்களிடத்தில் ராஜ்நாத் சிங் எடுத்துரைத்தார். மத்திய அரசு சார்பில் ராஜ்நாத் சிங் தவிர மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெய்ஷங்கர், நிர்மலா சீதாராமன் மற்றும் இதர அமைச்சர்கள் இருந்தார்கள்.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, திமுக சார்பில் டிஆர் பாலு உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டார்கள்.
"ஆபரேஷன் சிந்தூரில் பயங்கரவாதிகளின் 9 பதுங்கிடங்கள் குறிவைத்து தாக்கி அழிக்கப்பட்டன. ஏறத்தாழ 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளார்கள். உறுதியான தகவல்கள் இதுவரை கிடைக்கப்பெறவில்லை. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையைக் கணக்கிடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பதற்றத்தை அதிகரிக்க நாம் விரும்பவில்லை. ஆனால், பாகிஸ்தான் தாக்கினால், திருப்பி தாக்குதல் நடத்தப்படும்" என்று ராஜ்நாத் சிங் பேசியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தகவலறிந்த வட்டாரங்களின் அடிப்படையில் ஏஎன்ஐ எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:
"ஆபரேஷன் சிந்தூரில் 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை இன்னும் கணக்கிடப்பட்டு வருகிறது. ஆபரேஷன் சிந்தூர் இன்னும் நடந்துகொண்டிருப்பதால், சரியான எண்ணிக்கையைக் கொடுப்பதில் சிரமம் இருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, பாகிஸ்தான் ஏதேனும் நடவடிக்கையை மேற்கொள்ளும் வரை இந்தியா எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளாது என்றும் அரசு தெரிவித்துள்ளது" ஏஎன்ஐ செய்தி நிறுவனம் பதிவிட்டுள்ளது.
அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களிடத்தில் பேசிய ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைஸி, "பூஞ்சில் உயிரிழந்தவர்கள் பயங்கரவாதத் தாக்குதலால் உயிரிழந்தவர்கள் என்று அறிவிக்கப்பட வேண்டும். பாகிஸ்தானின் போர்நிறுத்த ஒப்பந்த விதிமீறல் காரணமாக எல்லாவற்றையும் இழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்கி வீடுகள் வழங்கப்பட வேண்டும்" என்றார் ஒவைஸி.