பாகிஸ்தானின் 3 முக்கிய விமானப்படை தளங்கள் மீது இந்தியா தாக்குதல்!

ராவல்பிண்டியில் உள்ள நூர் கான் விமானப்படை தளம் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
பாகிஸ்தானின் 3 முக்கிய விமானப்படை தளங்கள் மீது இந்தியா தாக்குதல்!
எல்லை பாதுகாப்புப் படை (BSF)
1 min read

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள 3 முக்கிய விமானப்படை தளங்கள் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியுள்ளது.  

பாகிஸ்தானில் உள்ள விமானப்படை தளங்களான நூர் கான் (ராவல்பிண்டி மாவட்டம்), முரித் (சக்வால்) மற்றும் ரஃபிக்கி (ஜாங் மாவட்டம்) மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் உளவுத்துறையின் செய்தித்தொடர்பு பிரிவு நேற்று நள்ளிரவில் செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது.

ஹரியாணா மாநிலத்தின் சிர்சாவில் உள்ள இந்திய விமானப்படை தளத்தை ஏவுகணைகள் மூலம் பாகிஸ்தான் தாக்க முயற்சி செய்துள்ளது. அவற்றை இந்திய வான்பாதுகாப்பு அமைப்பு வெற்றிகரமாக முறியடித்துள்ளது. இதை அடுத்தே, பாகிஸ்தான் விமானப்படை தளங்களை இந்திய விமானப்படை குறிவைத்துத் தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

ராவல்பிண்டியில் உள்ள நூர் கான் விமானப்படை தளம் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அந்நாட்டுப் பாதுகாப்புப் படைகளுக்கான தளவாடங்களும், சி-130 மற்றும் ஐஎல் 78 ரக ராணுவப் போக்குவரத்து விமானங்களும் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

முரித் விமானப்படை தளத்தில் துருக்கியால் வழங்கப்பட்டவை உள்ளிட்ட பலவிதமான ஆயுதம் தாங்கிய டிரோன்கள் வைக்கப்பட்டுள்ளன. ரஃபிக்கி தளத்தில், ஜே.எஃப்.17 மற்றும் மிராஜ் ரக போர் விமானங்களின் பிரிவுகளும், ஹெலிகாப்டர்களும் உள்ளன.

மேலும், ஸ்ரீநகர் மற்றும் ஜம்முவில் உள்ள இந்திய பாதுகாப்புபடைகளின் நிலைகள் மற்றும் சில மத வழிபாட்டிடங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியுள்ளது. அவற்றை இந்திய வான் பாதுகாப்பு அமைப்புகள் முறியடித்துள்ளன.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in