
மதிமுக முதன்மைச் செயலர் பதவியை ராஜினாமா செய்யும் முடிவை துரை வைகோ திரும்பப் பெற்றுள்ளார்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் மகனும் கட்சியின் முதன்மைச் செயலருமான துரை வைகோ மற்றும் துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா இடையே மோதல்போக்கு நிலவி வந்தது.
இதன் தொடர்ச்சியாக கட்சியின் முதன்மைச் செயலர் பதவியை ராஜினாமா செய்வதாக துரை வைகோ கடந்த ஏப்ரல் 19 அன்று அறிவித்தார்.
இந்நிலையில், கட்சியின் நிர்வாகக் குழுக் கூட்டம் இன்று கூட்டப்பட்டிருந்தது. மதிமுக அவைத் தலைவர் அர்ஜுனராஜ் தலைமையில் சென்னை எழும்பூரிலுள்ள கட்சித் தலைமையகமான தாயகத்தில் இன்று காலை 10 மணிக்குக் கூட்டம் கூடியது. மதிமுக பொருளாளர் மு. செந்திலதிபன், முதன்மைச் செயலாளர் துரை வைகோ, துணைப் பொதுச்செயலாளர்கள் மல்லை சத்யா, செஞ்சி ஏ.கே. மணி, ஆடுதுறை இரா. முருகன், தி.மு. இராசேந்திரன், டாக்டர் ரொஹையா மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டார்கள்.
முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ அறிவித்திருந்த நிலையில், நிர்வாகக் குழுக் கூட்டத்தில் முதன்மைச் செயலாளர் என்றே துரை வைகோவின் பொறுப்பு குறிப்பிடப்பட்டுள்ளது. மதிமுக பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வைகோ சிறப்புரை ஆற்றினார்.
இதைத் தொடர்ந்து, குடியரசுத் தலைவர் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியை நீக்க வேண்டும் என்பது உள்பட மொத்தம் 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்தக் கூட்டத்தில், நிர்வாகிகள் மூலம் வாக்கெடுப்பு நடத்தி தன்னைக் கட்சியிலிருந்து நீக்கிவிடுங்கள் என்று மல்லை சத்யா பேசினார். துரை வைகோ அரசியலுக்கு வர வேண்டும் என்பதை முதலில் விரும்பியதே தான் என்ற வகையில் அவர் பேசியதாகத் தகவல்கள் வெளியாகின.
இதைத் தொடர்ந்து, துரை வைகோ மற்றும் மல்லை சத்யா இடையே சமாதானப் பேச்சுவார்த்தை நடைபெற்றதாகத் தெரிகிறது. மல்லை சத்யா மற்றும் துரை வைகோ இருவரையும் கட்சிப் பணிகளை மேற்கொள்ளுமாறு வைகோ அறிவுறுத்தினார். இறுதியில் முதன்மைச் செயலர் பதவியை ராஜினாமா செய்யும் முடிவைத் திரும்பப் பெறுவதாக துரை வைகோ அறிவித்தார்.