டி20 உலகக் கோப்பைப் போட்டியில் கவனம் செலுத்துவதற்காக பிரபல ஆஸி. வீரர் ஆடம் ஸாம்பா, ஜபிஎல் போட்டியிலிருந்து விலகியுள்ளார்.
ஐபிஎல் போட்டி கடந்த மார்ச் 22 அன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை 24 ஆட்டங்கள் முடிந்த நிலையில் ராஜஸ்தான் அணி புள்ளிகள் பட்டியலில் 8 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.
இந்நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் ஆடம் ஸாம்பா ஜபிஎல் போட்டியிலிருந்து விலகியுள்ளார். இந்த பருவத்தில் அவர் ஒரு ஆட்டத்தில் கூட பங்கேற்கவில்லை. கடந்த ஆண்டு ஐபிஎல்-லில் ஸாம்பா ராஜஸ்தான் அணிக்காக 6 ஆட்டங்களில் விளையாடி 8 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
2023-ல் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பையில் ஆஸ்திரேலிய அணி விளையாடிய அனைத்து ஆட்டங்களிலும் ஸாம்பா பங்கேற்றார். எனவே 2023 முதல், தான் மிகவும் சோர்வடைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். தனது முடிவு பற்றி ஸாம்பா பேசியதாவது:
“ஐபிஎல் போட்டியிலிருந்து விலகப் பல காரணங்கள் உள்ளன. அதில் மிக முக்கியமான காரணம் டி20 உலகக் கோப்பை. 2023 முதல், நான் மிகவும் சோர்வடைந்துள்ளேன். எனவே என்னால் ராஜஸ்தான் அணிக்குச் சிறந்த பங்களிப்பை அளிக்க முடியாது என நினைக்கிறேன். டி20 உலகக் கோப்பைக்காக நான் தயாராக வேண்டும், அதுவே எனக்கு மிகவும் முக்கியம்” என்றார்.
ராஜஸ்தான் அணியில் சஹால், அஸ்வின், கேஷவ் மஹாராஜ் என மூன்று சுழற்பந்து வீச்சாளர்கள் இருப்பதால் ஸாம்பாவின் விலகல் பெரியத் தாக்கத்தை ஏற்படுத்தாது என எதிர்பார்க்கப்படுகிறது.