
ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கேவுக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் யுஸ்வேந்திர சஹல் ஹாட்ரிக் எடுத்துள்ளார்.
ஐபிஎல் 2025-ல் 49-வது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். மூன்றாவது பேட்டராக களமிறங்கிய சாம் கரண் இன்று பஞ்சாப் பந்துவீச்சாளர்களைப் பதம் பார்த்தார்.
30 பந்துகளில் அரைசதம் அடித்த சாம் கரண், சூர்யன்ஷ் ஷெட்கே வீசிய 16-வது ஓவரில் இரு சிக்ஸர்கள், இரு பவுண்டரி நொறுக்கினார். சதமடித்துவிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டபோது, 47 பந்துகளில் 9 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் உள்பட 88 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
எம்எஸ் தோனி 18-வது ஓவரில் உள்ளே வந்ததால், 19-வது ஓவரை வீசுமாறு சஹலிடம் பந்தைக் கொடுத்தார் ஷ்ரேயஸ் ஐயர். முதல் பந்தை தோனி சிக்ஸருக்கு அனுப்பினாலும் 2-வது பந்தில் 11 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
தீபக் ஹீடா முதல் பந்தில் இரு ரன்கள் எடுத்து 4-வது பந்தில் ஆட்டமிழந்தார். இம்பாக்ட் வீரராக உள்ளே வந்த அன்ஷுல் கம்போஜ் முதல் பந்தில் போல்டானார். சஹல் ஓவரின் கடைசி பந்தை எதிர்கொள்ள வந்த நூர் அஹ்மது தூக்கி அடிக்கப் பார்த்து கேட்ச் ஆனார். இதன்மூலம், ஐபிஎல் போட்டியில் இரண்டாவது முறையாக ஹாட்ரிக் எடுத்தார் சஹல்.
இதற்கு முன்பு 2022-ல் ராஜஸ்தான் ராயல்ஸுக்காக விளையாடிய சஹல், கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிராக ஹாட்ரிக் எடுத்தார். அப்போது 17-வது ஓவரில் பந்துவீசி ஹாட்ரிக் எடுத்தார். அன்றைய ஹாட்ரிக்கில் முதல் விக்கெட் அவருடைய இன்றைய கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர்.
இன்றைய ஆட்டத்தில் கடைசி ஓவரின் முதல் பந்தில் பவுண்டரி அடித்த ஷிவம் துபே, அடுத்த பந்திலேயே ஆட்டமிழந்தார். கடைசி 5 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்த சிஎஸ்கே 20 ஓவர்கள் முழுமையாக பேட் செய்யாமல் 19.2 ஓவர்களில் 190 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.