.avif?w=480&auto=format%2Ccompress&fit=max)
பாரிஸ் ஒலிம்பிக்ஸில் தங்கம் வென்ற அல்ஜீரிய வீராங்கனை இமானே காலிஃபின் பாலினம் குறித்த அவதாறு வழக்கில் எலான் மஸ்க், டிரம்ப் ஆகியோரின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
பாரிஸ் ஒலிம்பிக்ஸ் மகளிர் குத்துச்சண்டை 66 கிலோ எடைப் பிரிவில் அல்ஜீரியாவைச் சேர்ந்த இமானே காலிஃப் தங்கம் வென்றார்.
முன்னதாக, காலிறுதிக்கு முந்தையச் சுற்றில் இத்தாலியைச் சேர்ந்த ஏஞ்சலோ கரினியை எதிர்கொண்டார் இமானே காலிஃப்.
இந்த ஆட்டம் 46 நொடிகள் மட்டுமே நீடித்த நிலையில், காலிஃபின் முரட்டுத்தனமான குத்துக்குப் பிறகு இத்தாலிய வீராங்கனை ஆட்டத்திலிருந்து வெளியேறினார். இவரது மூக்கிலிருந்து ரத்தம் கசிந்தது.
இந்த ஆட்டத்தில் காலிஃப் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதன்பிறகு, இமானே காலிஃப் ஆணா பெண்ணா என சர்ச்சைக் கிளப்பப்பட்டது.
இதைத் தொடர்ந்து கடவுச் சீட்டில் ஒருவருக்கு என்ன பாலினம் குறிப்பிடப்பட்டுள்ளதோ அதன் அடிப்படையில்தான் வீரர்களின் பாலினம் அடையாளம் காணப்படும் என்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி விளக்கமளித்தது. இவற்றைக் கடந்து இறுதிச் சுற்று வரை முன்னேறிய இமானே காலிஃப், தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார்.
இதன் பிறகு இமானே காலிஃப், இணையத்தில் தனக்கு எதிராக அவதூறுகளைப் பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாரிஸில் புகாரளித்தார்.
இந்நிலையில், இமானே காலிஃபின் பாலினம் குறித்த அவதாறு வழக்கில் எக்ஸ் தளத்தின் உரிமையாளர் எலான் மஸ்க், அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப், எழுத்தாளர் ஜே.கே. ரௌலிங், பிரபல நீச்சல் வீராங்கனை கெயின்ஸ் ஆகியோரின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக அவரது வழக்கறிஞர் நபில் பௌடி வெரைட்டி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, அமெரிக்க நீச்சல் வீராங்கனை கெயின்ஸ் இமானே காலிஃப்பின் பாலினம் குறித்து சர்ச்சைக்குரியப் பதிவை பதிவிட்டிருந்தார். பெண்கள் விளையாட்டுகளில் ஆண்கள் சேர்க்கப்படக்கூடாது என்று அவர் பதிவிட, அதற்கு எலாம் மஸ்க் ‘நிச்சயமாக’ என்று பதில் அளித்தார்.
மேலும், “டிரம்ப் இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டார், எனவே இது குறித்த வழக்கில் அவர் பெயர் இருந்தாலும், இல்லாவிட்டாலும் அவரும் இந்த வழக்கின் ஒரு பகுதியாக இருப்பார்” என்று வழக்கறிஞர் நபில் பௌடி தெரிவித்துள்ளார்.